சென்னை: தமிழகத்தில் 1.85 லட்சம் ஏக்கர் பயிர்கள், மழையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கணக்கெடுப்பு பணி முடியாததால், விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் முதல், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஊழியர் பற்றாக்குறை இதேபோல், திருநெல்வேலி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களில், பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எட்டு மாவட்டங்களில், அதிகளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின், ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரவிட்டார். அதன்படி, ஏக்கருக்கு 8,000 ரூபாய் வரை நிவாரணம் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை, வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, எட்டு மாவட்டங்களில், 1.85 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேளாண்மை மற்றும் வருவாய் துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், கணக்கெடுப்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. கணக்கெடுப்பு கணக்கெடுப்பு பணி முழுமை பெறாததால், விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணக்கெடுப்பு தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளை அழைத்து, முதல்வரின் செயலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுப்பதற்கு முன்பாக, கணக்கெடுப்பு பணிகளை முடிக்க உத்தரவிட்டு உள்ளனர். மேலும், கணக்கெடுப்பு முடிந்த மாவட்டங்களில் மட்டும், விவசாயிகளுக்கு இழப்பீடை முதலில் வழங்கலாமா என, அரசு பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.