உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வரோக நிவாரணி அல்ல பொதுநல வழக்கு ஐகோர்ட் திட்டவட்டம்

சர்வரோக நிவாரணி அல்ல பொதுநல வழக்கு ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: 'பொதுநல வழக்கு என்பது, எல்லா தவறுகளுக்கும் சர்வரோக நிவாரணி அல்ல' என, சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த ஆதித்யா தாக்கல் செய்த மனு: குற்ற வழக்கில், எனக்கு எதிராக பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை தெரிவித்தது. அதை ஏற்று, என் மனு தள்ளுபடியானது. பின், குற்றப்பத்திரிகை நகல் கேட்டு விண்ணப்பித்த போது, எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை என, மனு திருப்பி அனுப்பப்பட்டது. நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்த அரசு வழக்கறிஞர் மற்றும் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்திருந்து, அதற்கு ஆதாரம் இருந்தால், சட்டப்படியான நடவடிக்கையை மனுதாரர் எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தனிப்பட்ட காரணத்துக்காக தாக்கல் செய்த இந்த வழக்கை, பொதுநல வழக்காக கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மேலும், பொதுநல வழக்கு என்பது எல்லா தவறுகளுக்கும் சர்வரோக நிவாரணி அல்ல. நீதிமன்றத்தை நாட முடியாதவர்களின் பிரச்னைக்காக, மற்றவர்கள் நீதிமன்றத்தை நாட உருவாக்கப்பட்டது தான் பொதுநல வழக்கு. இதை, தனிப்பட்ட பிரச்னைகளை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்த முடியாது. மனுதாரர், தன் குறைகளுக்கு உரிய அமைப்பை நாடி, நிவாரணம் பெறலாம் . இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ