உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரங்கள் மேல்முறையீட்டுக்கு கட்டுப்பாடு; சார் -- பதிவாளர்கள் அதிருப்தி

பத்திரங்கள் மேல்முறையீட்டுக்கு கட்டுப்பாடு; சார் -- பதிவாளர்கள் அதிருப்தி

சென்னை : வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்பில் தாக்கலாகும் பத்திரங்களை, மேல் முறையீட்டுக்கு பரிந்துரைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது, சார் - பதிவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், வீடு, மனை போன்றவற்றை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரத்தை, பதிவுக்கு சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

நடவடிக்கை

அதில், சம்பந்தப்பட்ட சர்வே எண்ணுக்கு முறையாக வரையறுக்கப்பட்ட, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சொத்து மதிப்பு இருக்க வேண்டும். வழிகாட்டி மதிப்புக்கு இணையாக அல்லது கூடுதலாக, மதிப்புகள் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால், அதில் பிரச்னை ஏற்படாது. ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைவான மதிப்பில் பத்திரங்கள் இருந்தால், அதை பதிவுத்துறை ஏற்காது.இதுபோன்ற பத்திரங்களை பதிவு செய்தால், தணிக்கையில் கண்டுபிடித்து, அதனால் ஏற்பட்ட இழப்பு சார் - பதிவாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். சில சமயங்களில் சார் - பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, மதிப்பு குறைவாக குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களை, மேல்முறையீட்டுக்கு அனுப்ப, சார் - பதிவாளர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இந்த பத்திரங்கள் மாவட்ட பதிவாளர் வழியே, துணை உதவி கலெக்டர் தலைமையிலான குழுவின் ஆய்வுக்கு செல்லும். அவர்கள் இரண்டு தரப்பு கருத்துகளையும் கேட்டு, அந்த சொத்துக்கான மதிப்பை இறுதி செய்வர். இந்நிலையில், சார் -பதிவாளர்கள் தங்களை கேட்காமல், பத்திரங்களை மேல் முறையீட்டுக்கு பரிந்துரைக்க கூடாது என, உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது, சார் - பதிவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிக பணி நீக்கம்

இதுகுறித்து சார் - பதிவாளர்கள் கூறியதாவது: மதிப்பு வேறுபாடு உள்ள பத்திரங்களை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மேல் முறையீட்டுக்கு பரிந்துரைக்கலாம். ஆனால் தற்போது, இத்தகைய பத்திரங்களை, தன்னிச்சையாக மேல் முறையீட்டுக்கு பரிந்துரைக்காமல், அதன் விபரங்களை, மாவட்ட பதிவாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.மாவட்ட பதிவாளர், அவருக்கு மேல் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, மேல்முறையீட்டுக்கு பரிந்துரைக்கலாமா என்று தெரிவிப்பார். இது, காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன், தவறு நடக்கவும் வாய்ப்பு உள்ளது. இதை மீறி தன்னிச்சையாக மேல்முறையீட்டுக்கு சார் - பதிவாளர் பரிந்துரைத்தால், அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில இடங்களில் சார் - பதிவாளர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவதும் நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து பதிவுத்துறை தலைமையக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதிப்பு வேறுபாடு உள்ள பத்திரங்களை, மேல் முறையீட்டுக்கு அனுப்புவற்தான வழிகாட்டுதல்களை, பதிவுத்துறை தலைவர் ஏற்கனவே பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் மட்டுமே, சார் - பதிவாளர்கள் செயல்பட வேண்டும். இவ்விஷயத்தில் வெளிநபர் தலையீடு இருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் தாராளமாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 28, 2025 08:50

கணக்கில் காட்டாத கள்ள பணத்தை வைத்து நிலம் வாங்குபவர்கள் பதிவு செய்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்து குறைந்த மதிப்பிற்கு பத்திரம் வாங்கி பதிவு seithu மேல் முறையீட்டில் அதனை நிலை திருத்திக்கொள்ள வழிவகுக்கும் நடை முறையை எல்லாம் மாற்றி வாங்கும் மதிப்பிற்கு பத்திரம் இருந்தால் தான் பதிவு செய்ய வேண்டும் என ஏற்பாடு செய்தால் அரசுக்கு வருவாய் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை