சேலம் : சேலம், புது பஸ் ஸ்டாண்டில், கம்மங் கூழ் விற்பனை செய்யும் வியாபாரியிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன், 40; இவர், சேலம் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில், கம்மங்கூழ் கடை நடத்தி வருகிறார். 'கடை நடத்த, தனக்கு லஞ்சமாக தினம், 200 ரூபாய் வழங்க வேண்டும்' என, மாநகராட்சி பில் கலெக்டர் விஜயன் கேட்டுள்ளார். இதற்காக, தினம், 200 ரூபாய் வழங்கி வந்த சகாதேவன், பிறகு, வாரத்துக்கு, 1,000 ரூபாய் லஞ்சமாக வழங்கி வந்தார். சகாதேவனின் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ செலவு அதிகரிக்கவே, அவரால் பணம் வழங்க இயலவில்லை.
தன் நிலையை பில் கலெக்டர் விஜயனிடம் தெரிவித்தும், பணம் தராத ஆத்திரத்தில் லட்சுமணன் என்பவருடன் சேர்ந்து, சகாதேவனை தாக்கியதோடு, கம்மங்கூழ் பானை உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார். அதிர்ச்சியடைந்த சகாதேவன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி சகாதேவன், நேற்று, புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பில் கலெக்டர் விஜயனிடம் வழங்கினார். மறைந்திருந்த போலீசார், விஜயனை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விசாரிக்கின்றனர்.