உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய இணையமைச்சர் தம்பி மீது வழக்கு : தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

மத்திய இணையமைச்சர் தம்பி மீது வழக்கு : தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

நாமக்கல் : அரசு கேபிள் 'டிவி' ஒயரை சேதப்படுத்தி, 18 லட்ச ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய, மத்திய இணையமைச்சர் தம்பியை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட தி.மு.க., செயலரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சருமான காந்திசெல்வனின் உடன் பிறந்த தம்பி சுரேஷ். கேபிள், 'டிவி' தொழிலில் ஈடுபட்டுள்ளதோடு, ஆகாஷ், 'டிவி' என்ற பெயரில், லோக்கல் சேனல் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.

மாவட்டம் முழுவதும், சுரேஷிடம் பலர் இணைப்புகளைப் பெற்று, கேபிள் 'டிவி' தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் நாமக்கல் வந்த, அரசு கேபிள், 'டிவி' வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், பல கேபிள் சப்-ஆபரேட்டர்கள், சுரேஷ் மீது புகார் தெரிவித்தனர்.

எருமப்பட்டியைச் சேர்ந்த கேபிள், 'டிவி' ஆபரேட்டர் ஒருவர், 'என் இணைப்புக்கு உண்டான தொகை முழுவதையும், சுரேஷ் பணியாட்கள் வசூலித்துக் கொள்கின்றனர். அதுபற்றிக் கேட்டால், முறையான பதில் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். கேபிள் இணைப்புக்கு ஆகும் மின் கட்டணம், இட வாடகை என, அனைத்தையும் நான் செலுத்தி வருகிறேன்' என, புகார் செய்தார்.

இந்நிலையில், நாமக்கல் டவுன் ஆர்.ஐ., ஆனந்தன், நாமக்கல் போலீசில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஐந்தாண்டுக்கு முன், நாமக்கல் முருகன் கோவில் அருகே, 18 கி.மீ., நீளமுள்ள அரசு கேபிள், 'டிவி' ஒயர் வைக்கப்பட்டிருந்தது. இணையமைச்சர் தம்பி சுரேஷ், தனது கேபிள் 'டிவி' நிறுவனத்துக்கு அதை முறைகேடாக பயன்படுத்தி சேதப்படுத்தியுள்ளார். அதன்மூலம் அரசுக்கு, 18 லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சுரேஷ் தலைமறைவானதால், தனிப்படை போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை