உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு மறுப்பு 

விஜய் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு மறுப்பு 

சென்னை: 'தமிழகத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு இரு மடங்காக உயர்ந்துள்ளது' என, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, ''அலையாத்தி காடுகளை காக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகையில் அலையாத்தி காடுகள், கடல்சார் கல்லுாரி, காவல் துறை நிபந்தனைகள் குறித்து, விஜய் கூறிய தவறான தகவல்கள். தவறான தகவல் 1: மண் அரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்தி காடுகளை காக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மை: தமிழகத்தில் சதுப்பு நில காடுகள், அலையாத்தி காடுகளின் பரப்பளவு இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் முயற்சியால், 2021ல், 45 சதுர கிலோ மீட்டராக இருந்தவை தற்போது, 90 சதுர கிலோ மீட்டராக பெருகியுள்ளன. நாகை மாவட்டத்தில், 1,447 ஏக்கர் நிலப்பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், 1,286 ஏக்கர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன. தவறான தகவல் 2: கடல்சார் கல்லுாரி ஏதும் நாகையில் இல்லை. உண்மை: டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலை நாகையில் இயங்கி வருகிற து தவறான தகவல் 3: மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கின்றனர். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழகம் வரும்போது, நிபந்தனைகளை போடுவீர்களா? உண்மை: சென்னையில் கடந்த, 2024 ஏப்., 9ம் தேதி பிரதமரின் பேரணிக்கு, காவல் துறை, 20 நிபந்தனை களை விதித்தது. தவறான தகவல்களை பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை