கட்சியில் எந்த முக்கியத்துவமும் தரப்படாததாலும், பழனிசாமியின் பாராமுகத்தாலும், அதிருப்தியிலும் வருத்தத்திலும் இருக்கும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, ஆளும் தி.மு.க., தரப்பில் வலை விரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nbmdrto4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கமணி, 63; அ.தி.மு.க., மாவட்ட செயலரான இவர், 2011 - 16ல் வருவாய், தொழில் துறை அமைச்சர்; 2016 - 21ல் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி அமைச்சரவையிலும், அவருக்கு இதே துறைகள் ஒதுக்கப்பட்டன. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், தங்கமணியும் சம்பந்தி முறையில் உறவினராவார். இதன் காரணமாக, இருவரும் நகமும், சதையுமாக நெருக்கமாக இருந்தனர். சோதனை கடந்த 2021ல் ஆட்சி மாற்றத்துக்கு பின், உறவில் மெல்ல விரிசல் விழ துவங்கியது. அதற்கேற்ப தங்கமணி வீடு உள்ளிட்ட பல இடங்களில், 2021 டிச., 15ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அந்த நெருக்கடியான நேரத்தில், பழனிசாமியிடம் இருந்து பெரிய அளவில் ஆதரவும், உதவியும் கிடைக்கும் என, தங்கமணி நம்பினார். ஆனால், பெயரளவுக்கு ஒரு கண்டன அறிக்கை மட்டுமே பழனிசாமியிடம் இருந்து வந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், பழனிசாமி எடுத்த முடிவுகள், தங்கமணிக்கு ஏற்புடையதாக இல்லை. இதையடுத்து, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைந்து, இழந்த பலத்தை கட்சி மீண்டும் பெற, சில யோசனைகளை, பழனிசாமியிடம் தனிப்பட்ட முறையிலும், கட்சி ஆலோசனை கூட்டங்களிலும் வலியுறுத்தினார். கட்சி நலனுக்காக அவர் சொன்ன யோசனை, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற பிம்பத்தையே, அவர் மீது விழ வைத்தது. பழனிசாமியின் சந்தேகத் திற்கும் ஆளாக நேரிட்டது. அதன்பின், அ.தி.மு.க.,வில் தங்கமணிக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவம் குறையத் துவங்கியது. அதனால், உடல் நலத்தை காரணம் காட்டி ஒதுங்கத் துவங்கினார். மனப்புழுக்கம் பிரதமரை சந்திக்க, பழனிசாமி டில்லி சென்ற போதும், சமீபத்தில் பிரதமர் மோடியை திருச்சியில் வரவேற்க சென்ற போதும் தங்கமணிக்கு அழைப்பு இல்லை. மனப்புழுக்கத்தில் தங்கமணி இருக்கும் செய்தி, அவரது உறவினர்கள் வாயிலாக, அறிவாலயத்திற்கு எட்டியது. அதன் பலனாக, அங்கிருந்து மறைமுக அழைப்புகள் வரத் துவங்கியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், தி.மு.க.,வை வழிநடத்த சரியான தலைமை இல்லை. நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களின் செயல்பாடுகள், ஆளும் தலைமைக்கு பிடிக்கவில்லை. கட்சியை மாவட்டத்தில் வழிநடத்தவும், துணை முதல்வர் உதயநிதிக்கு உறுதுணையாக இருக்கவும், தங்கமணி முழு தகுதி பெற்றவர் என, ஆளும் தலைமை நம்பும் தகவல், உறவினர் ஒருவர் வாயிலாக, தங்கமணி தரப்புக்கு சொல்லப்பட்டுள்ளது. தங்கமணி வருகை தங்களை பாதிக்கும் என்பதால், கொங்கு மண்டல தி.மு.க., நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போட முயற்சிக்கின்றனர். அந்த தடையை மீறி, தங்கமணிக்கு எந்த நேரத்திலும் அழைப்பு மணி அடிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'அப்பாவும் அதையே சொல்வார்'
தங்கமணியின் மகன் தரணீதரன் கூறியதாவது: கட்சி என்றால், பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். முரண்பாடுகளும் நிறைய உண்டு. எல்லாமே பேசித் தீர்க்கக்கூடியவை தான். அதற்காக, கட்சி மாறி செல்லும் அளவுக்கு, அப்பா பலவீனமானவர் அல்ல. ஏற்கனவே, இதே மாதிரியான செய்திகள் வெளிவந்தன. அப்போது, அப்பா ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது, 'என் உடம்பில் சத்து இருக்கும் வரை, மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன்' என்றார். அதே விளக்கத்தையே இப்போதும் சொல்ல முடியும். அப்பாவும் அதையேதான் சொல்வார். இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -