இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் மாவட்ட பதவி
ஆரணி,: மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு, அ.தி.மு.க.,வில் பதவி வழங்கியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், தலா 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் வீதம், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து, அ.தி.மு.க., தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதில், மத்திய மாவட்டத்தை சேர்ந்த ஆரணியை அடுத்த அக்ராபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணன், 62, பெயர் இடம் பெற்றது. அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசியான இவர், கடந்த மார்ச் 16ல் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால், அவருக்கு, திருவண்ணாமலை மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பதவி வழங்கி, கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டதால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.