அண்ணாமலை கழுத்தில் விழ வேண்டிய மாலை தட்டிப் பறிப்பு
காரைக்குடி:''தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது'' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டினார். காரைக்குடியில் தினகரன் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெ., தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். அதற்கு சில சுயநலவாதிகள் தடையாக உள்ளனர். அவ்வாறு இணையும்போது அ.ம.மு.க.,வும் அதில் இணைவது குறித்து யோசிக்கலாம். பின், தொண்டர்கள் முடிவு செய்வர். கடந்த காலத்தில் ஈ.வெ.ரா.,வை புகழ்ந்து பேசிய சீமான் இப்போது இகழ்ந்து பேசுவது ஏன்?தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கூலிப்படையும் போதைப்பொருள் பயன்பாடும் தான் அதிகரித்துள்ளது. இதை சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா அல்லது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று மமதையில் இருக்கிறார்களா என தெரியவில்லை. சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதுவரை இல்லாத மோசமான ஆட்சியை தமிழகம் சந்தித்து வருகிறது. கவர்னர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சொல்வதை, மத்திய அரசு தடுக்க வேண்டும். தி.மு.க.,வினர் வீட்டு குழந்தைகளுக்கு ஹிந்தி தெரியும். அவர்களின் பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்வர். ஆனால், அடுத்தவர்களுக்கு மட்டும் அறிவுரை கூறுவர். டங்ஸ்டன் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு இருந்ததால் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. இதை தி.மு.க., சொந்தம் கொண்டாடுவது அவர்களது பழக்கம். அண்ணாமலை கழுத்தில் விழ வேண்டிய மாலையை, ஸ்டாலின் தட்டி பறித்துள்ளார். அண்ணாமலை தமிழக மக்களின் நன்மைக்காக செய்தார். டங்ஸ்டன் திட்டம் ரத்தில் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.