நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்... உடைந்தது :தி.மு.க., ஏமாற்றியதாக விஜய் கோபம்
சென்னை:மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை, தி.மு.க., உடைத்து விட்டது. 'அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை; மத்திய அரசுக்கு தான் உண்டு' என, மூன்றரை ஆண்டுகளுக்கு பின், டில்லியை கைகாட்டியுள்ளார் முதல்வர். இந்த விவகாரத்தில், தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றி விட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டித்திருக்கிறார்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., தலைவர்கள், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும்' என, ஊர்தோறும் பிரசாரம் செய்தனர். ஆட்சிக்கு வந்த பிறகும், அந்த தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறி வந்தனர்.தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம், கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த விஷயத்தை மீண்டும் கிளறினார். 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். மூன்றரை ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்?' என, கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது உண்மை தான். நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை; மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும். 'மத்தியில் 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், நீட் தேர்வை ரத்து செய்திருப்போம். எங்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுலும் ஏற்றுக் கொண்டிருந்தார். மத்தியில், இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்றார்.அதற்கு சட்டசபையிலேயே பதிலடி கொடுத்த பழனிசாமி, 'மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி இருந்த போது தான், நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இண்டி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை வகிக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ், நீட் தேர்வை எப்படி ரத்து செய்யும்?' என கேள்வி எழுப்பினார்.'நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் பேசியதன் வாயிலாக, மாணவர்களையும், பெற்றோரையும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:'இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே' என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன. தேர்தலின் போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும்; தேர்தலில் வெற்றி பெற்ற பின், மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. அவற்றில், மிக முக்கியமானது நீட் தேர்வு. கடந்த 2021 தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம்; நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும்' என்று பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது, 'நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது; மாநில அரசால் ரத்து செய்ய முடியாது' என்று தெரிவித்திருப்பது, ஓட்டளித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.