இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை
சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, சிதம்பரத்தில் தலா, 5; புவனகிரி, அண்ணாமலை நகர் பகுதிகளில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 28 வரை மிதமான மழை தொடரலாம். தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.