உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கில் மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க அவகாசம்

திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கில் மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க அவகாசம்

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், மத்திய தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம்.

தடை விதிக்க வேண்டும்

மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு, தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மலையிலுள்ள பிற அனைத்து பகுதிகளும், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது' என ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, பொதுநல மனு தாக்கல் செய்தார்.திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக, சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார். திருப்பரங்குன்றம் ஒசீர்கான், 'மலையிலுள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள் தலையிடக்கூடாது. அப்பகுதியில் சீரமைப்பு, கட்டுமானப் பணி மேற்கொள்வதை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று மனு செய்தார்.

அரசின் நோக்கம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், 'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான படுகைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மலையை சமணர் குன்றாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுத்தாக்கல் செய்தார்.இவ்வழக்குகளை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு தரப்பில், 'சமூக நல்லிணக்கத்தை பேணிக் காப்பதே அரசின் நோக்கம்' என வாதிட்டனர். சோலை கண்ணன் தரப்பில் வாதிடும்போது, 'மலையில் இதுவரை ஆடு, கோழி பலியிட்டதில்லை என ஏற்கனவே அறநிலையத்துறை தரப்பு, காவல் துறைக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், போலீசார் விசாரணையின் அடிப்படையில், ஆடு, கோழி பலியிட்டதற்கு ஆதாரம் உள்ளது என, கலெக்டர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்; இது உண்மைக்கு புறம்பானது' என்று குறிப்பிட்டனர். தர்கா நிர்வாகம் தரப்பில் வாதாடியோர், 'மலையின் அடிவாரத்திலிருந்து நெல்லித்தோப்பிற்கு செல்லும் பாதை, கோவில், தர்கா நிர்வாகங்களுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு, தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள், தர்கா, கொடி மரம் அமைந்துள்ள பகுதி தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது.இவை தவிர ஏனைய பகுதிகள், கிரி வீதி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என மதுரை சார்பு நீதிமன்றம், 1923ல் உத்தரவிட்டது. இதை ஆங்கிலேயர் ஆட்சியின்போது, லண்டன் பிரிவி கவுன்சிலின் ஐந்து நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது' என்று குறிப்பிட்டனர். சோலை கண்ணன், ராமலிங்கம் வழக்குகளில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனு செய்த சரவணன் தரப்பு வாதாடுகையில், 'வழிபாட்டுத் தலங்கள் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவகாசம் தேவை

'வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கக்கூடாது என பிற நீதிமன்றங்கள் இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளன.'கோவில்களில் ஆடு, மாடு, கோழி பலியிடுவதற்கான தடை சட்டத்தை, தமிழக அரசு 2004ல் திரும்பப் பெற்றது. ஆடு, கோழி பலியிடுவதை தடுக்க சட்டம் எதுவும் இல்லை. இம்மனு நிலைக்கத்தக்கதல்ல' என குறிப்பிட்டனர்.மத்திய அரசு தரப்பிலும் வாதிட்டனர். அவர்கள், 'மலை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலையில் எவ்வித நடவடிக்கையும் ஏ.எஸ்.ஐ.,யின் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது. தற்போதைய நிலை தொடர வேண்டும். ஏ.எஸ். ஐ., பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என்றனர்.அனைத்து தரப்பையும் கேட்ட நீதிபதிகள், 'லண்டன் பிரிவி கவுன்சிலின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அந்த உத்தரவு பின்பற்றப்படும்' என்றனர். கூடவே, ஏ.எஸ்.ஐ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து ஏப்.,7க்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை