சென்னை: சட்டசபை தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை இரண்டு மாதங்களில் பரிசீலிக்கும்படி, மத்திய தகவல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு, இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டில் நடக்க உள்ளது. தேர்தலின்போது, பணப் பட்டுவாடா குறித்து புகார் அளிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் இருக்கிறதா; வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த கட்சிகள், வேட்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க, மொபைல் போன் செயலி, இணையதள வசதிகள் உள்ளனவா; பணப் பட்டுவாடா தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறப்பட்டன என்ற விபரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தேன். இரண்டு கேள்விகளுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் பொது தகவல் அதிகாரி பதில் அளித்தார். அதை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்டில், இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தேன். அந்த மனு, இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. அந்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலித்து தகவல் அளிக்கும்படி, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, 'மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு மாதங்களில் முடிவெடுக்கவில்லை எனில், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்' எனக்கூறி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.