திருச்சியில் விஷ வாயு தாக்கி துப்புரவு ஊழியர் இருவர் மரணம்
திருச்சி:திருச்சி அருகே விஷவாயு தாக்கி, இரு தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில், தனியார் நிறுவன கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கார்மெல் கார்டனில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்ய பாதாள சாக்கடையில் இறங்கிய ரவி, 38, பிரபு, 32, என்ற இரு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் விஷவாயு தாக்கி பலியாகினர். இதுகுறித்து, திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், ஒப்பந்த பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்த தவறிய, பாதாள சாக்கடை சீரமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்ய கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவன மேலாளர் கந்தசாமி, கண்காணிப்பாளர் இளவரசன், 40, ஆகியோர் மீது வழக்கு பதிந்து, இளவரசனை நேற்று கைது செய்தனர். தலைமறைவான கந்தசாமியை தேடி வருகின்றனர். இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்காமல் உடல்களை வாங்க மாட்டோம் என, இறந்தவர்களின் உறவினர்கள் கூறி விட்டதால், நேற்று மாலை வரை பிரேத பரிசோதனை நடக்கவில்லை. இ தையடுத்து, உயிரிழந்த துாய்மை பணியாளர்கள் இருவரது குடும்பத்திற்கும், தலா 30 லட்ச ரூபாயை இழப்பீடாக திருச்சி மாநகராட்சி வழங்கியது. உடன், துாய்மை பணியாளர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், 'துாய்மை பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி, அவர்களது நல்வாழ்வுக்கு பிரதமர் மோடி அரசு வித்திடும் நிலையில், ஸ்டாலின் அரசு, போதிய உபகரணங்களை வழங்காமல், அவர்களை காவு வாங்கி வருகிறது' என, இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகே ந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.