திருவண்ணாமலை : ''உடல் கொழுப்பு, வாய் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பணக் கொழுப்பு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்; அதுதான் விஜய்க்கு உள்ளது. அதனால் தான், பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ளார்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.வழக்கில் ஆஜராவதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றம் வந்த சீமான் நேற்று அளித்த பேட்டி: மாநிலம் முழுதும் பயணம் செய்து வருகிறேன். பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தில் எத்தனை ஆறு, ஏரி, குளம், எத்தனை சமூக மக்கள், எந்த சமூக மக்களுக்கு பிரச்னை என்ன என அவருக்கு தெரியாது. உடல் கொழுப்பு, வாய் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பணக் கொழுப்பு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்; அதுதான் விஜய்க்கு உள்ளது. அதனால் தான், பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து வியூக வகுப்பாளர் ஆக்கி உள்ளார். இதையெல்லாம் பேசினால், கோபம் தான் வருகிறது. தைப்பூச விழாவிற்கு வழக்கம் போல் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அப்படிபட்டவர், பழனியில் ஏன் முருகனுக்கு மாநாடு நடத்தினார்?இந்த மண்ணின் மக்கள், நல்ல அரசியலை விரும்புகிறவர்கள். ஊழல், லஞ்சமற்ற, துாய நிர்வாகத்தை விரும்புகிற மக்கள், கவலை, கண்ணீரோடு வீதியில் நின்று போராடும் மக்கள் ஆகியோரோடு தான் நான் கூட்டணி வைத்திருக்கிறேன். மற்ற கட்சித் தலைவர்களையோ, வியூக வகுப்பாளர்களையோ நம்பி கட்சி ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புல் அவுட்:
பட்டிமன்றத்தில் பேசத்தான் அரசியலா?நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மைக் கிடைத்துவிட்டால் எதையாவது உளறுவார். சமகால சமூகச் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்து கொள்ளாமல் பணக் கொழுப்பு என பகிரங்கமாக விமர்சித்துள்ள சீமானுக்கு, நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் டிபாசிட் இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட சீமான், இன்னும் எத்தனை ஆண்டுகள், 'வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி' என அக்கட்சியினரை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு, திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமல்ல. சட்டசபையில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம். பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என சீமான் எண்ணிக் கொண்டிருக்கிறார்.சம்பத்குமார், கொள்கை பரப்பு இணை செயலர், த.வெ.க.,