| ADDED : டிச 03, 2025 06:30 AM
விழுப்புரம்: ஆன்லைனில் சம்பாதிக்கலாம் எனக்கூறி, பெண்ணிடம் 27.42 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். விழுப்புரம், சாலாமேடு பகுதியை சேர்ந்த 53 வயது பெண்ணின் மொபைல் போனுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறியுள்ளார். மேலும், தாங்கள் அனுப்பும் ஆன்லைன் லிங்க் மூலம் வரும் ஐ.பி.ஓ., சப்கிரிப்ஷனில் முதலீடு செய்தால், அதிக தொகை சம்பாதிக்கலாம் என கூறி, அதற்கான லிங்க்கையும் அனுப்பியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், அந்த லிங்க் உள்ளே சென்றபோது, டிரேடிங் ஆப் ஒன்று டவுன்லோடு ஆகி, அதனுள் சென்று, தனது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அளித்துள்ளார். மேலும், மர்ம நபர் கூறியபடி பணியை மேற்கொண்டவர். அந்த மர்ம நபர் கூறியபடி தனது வங்கி கணக்கு மூலம், இணைய வழியில் கடந்த அக்டோபர் 5 முதல் நவம்பர் 9ம் தேதி வரையில், 27 லட்சத்து 42 ஆயிரத்து 480 ரூபாயை 23 தவணைகளாக முதலீடு செய்துள்ளார். ஆனால், மர்ம நபர் கூறியபடி, தொகையை அனுப்பாமல் மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், நேற்று வழக்குப் பதிந்து, ஆன்லைன் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.