மதுரை : ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில், கார்ட்டூன் வெளியிட்டதற்கு தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர் கீழடி விவகாரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கிண்டல் செய்து, எக்ஸ் தளத்தில் கார்ட்டூன் வெளியிட்டிருந்தார். அதை உடனடியாக நீக்கவும், தி.மு.க., ஐ.டி., அணிக்கு பொறுப்பு வகிக்கும் அவ்வணியின் செயலர், அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, மதுரை எஸ்.பி.,யிடம், உதயகுமார் புகார் அளித்தார்.பின் உதயகுமார் அளித்த பேட்டி:
பழனிசாமி தி.மு.க., அரசின் குறைகளை தினமும் சுட்டிக்காட்டி வருவதை, தி.மு.க.,வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், தனிநபர் விமர்சனத்தில் இறங்கியுள்ளனர். நான்கரை ஆண்டுகள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை. அதை திசைதிருப்ப அவதுாறு செய்தியை பரப்புகின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனக்குத்தானே சட்டையை கிழித்துக்கொண்ட ஸ்டாலினை விமர்சித்து நாங்களும் கார்ட்டூன் வெளியிட முடியும். பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில், தொடர்ந்து இதுபோன்று பதிவு செய்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். பழனிசாமியை கிண்டல் செய்து தி.மு.க.,வினர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, மதுரையில் உதயகுமார் போலீசில் புகார் அளித்தது போல, தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை அறிவித்துள்ளார்.