மதுரை : காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையில் அவரது ஆதரவாளர்கள், டில்லியில் ஊழல் எதிர்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள இருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது. அகிம்சை வழியில் போராடும் அவது வழியை பின்பற்ற மக்கள் எழுச்சியுடன் எழுவார்கள், என அவரது ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழரசன் (நம்நாடு மக்கள் மீட்பு பேரவை தலைவர்): நம் சுதந்திர நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது, என்பதை சிறுவர்கள் கூட இன்று முழுமையாக அறிந்துள்ளனர். அரசியல்வாதிகள் ஊழல் செய்பவர்களாகவும், அதிகாரிகள் அதை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும். ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை உறுதி என்ற நிலை வரவேண்டும். ஊழலுக்கு எதிராக மக்கள் எழும் காலம் வந்துவிட்டது. இதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
அகல்யா (சட்டக்கல்வி மாணவி): அன்னா ஹசாரேயின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறோம் என கண்துடைப்புக்கு சொல்லிவிட்டு, ஏமாற்றும் வகையில் மத்திய அரசு நடந்துள்ளது. தவறு செய்பவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படவேண்டும். அதற்கு ஏற்றவகையில் தான் அன்னா ஹசாரேயின் லோக்பால் மசோதா உள்ளது. அதை நிறைவேற்றுதவற்கு தயக்கம் காட்டவேண்டியது இல்லை. அதை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீனாகுமாரி (யோகா மைய நிறுவனர்): அன்னா ஹசாரேயை கைது செய்துள்ளது மன்னிக்க முடியாத குற்றம். காந்தியவழியில் போராட்டம் நடத்துவதற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவரது மசோதாவை நிறைவேற்றினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். இது தொடர்பான ஒரு உணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அவரோடு இணைந்து போராடும் மக்களுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
மாதவன் (அப்போலோ மருத்துவமனை டாக்டர்): லோக்பால் மசோதா 1960ல் கொண்டுவரப்பட்டுள்ளது. குறைபாடுகள் இல்லாத மசோதாவாக இருக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதலை அன்னா ஹசாரே எடுத்துள்ளார். அவரை குறித்து நாடு முழுவதும் இளைய தலைமுறையினர் நன்கு அறிந்துள்ளனர். அதனால் தான் அவரது போராட்டத்திற்கு ஒரு எழுச்சி கிடைத்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் தான் தவறு செய்வோருக்கு பயம் இருக்கும். சுதந்திர நாட்டிற்குஇது தேவையாக உள்ளது. அன்னா ஹசாரே மீது ஏவப்பட்டுள்ள அடக்குமுறை தேவையற்றது.