| ADDED : டிச 27, 2025 04:37 AM
புதுடில்லி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அரசியல் வன்முறை அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறி, புறக்கணிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சமீப நாட்களாக ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை, அங்குள்ள கும்பல் மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு, உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அதிர் ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத நிந்தனை செய்ததாக கூறி ஹிந்து இளைஞரை, ஒரு கும்பல் உயிருடன் தீயிட்டு கொன்றதை ஏற்க முடியாது. இச்சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும் கவலைக்குரிய விஷயம். அங்குள்ள இடைக்கால அரசின் பதவிக்காலத்தில் மட்டும் சிறுபான்மையினருக்கு எதிராக 3,000 வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதை அரசியல் வன்முறை என்றோ, ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்றோ கூறி, வங்கதேச அரசு புறக்கணிப்பதை ஏற்க முடியாது. வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பதை மத்திய அரசு ஆதரிக்கிறது. இந்த கண்ணோட்டத்துடனே, தாரிக் ரஹ்மான் திரும்பியதையும் பார்க்கிறோம். அங்குள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும்படி, மத்திய அரசு தன் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. வங்கதேசத்தில் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மதத்தை பாராமல், அனைத்து மக்களையும் பாதுகாக்க தன் அரசியலமைப்பு கடமைகளை வங்கதேச அரசு நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.