முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்? அமெரிக்க - ரஷ்ய அதிபர்கள் விரைவில் சந்திப்பு
மாஸ்கோ:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனால், உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உ ள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்றரை ஆண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என, டிரம்ப் எச்சரித்தார். ஆனால், டிரம்பின் நிபந்தனைகளை ஏற்க, புடின் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது. ரஷ்யா - -உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு இன்று வரை காலக்கெடுவும் விதித்திருந்தார் டிரம்ப். இந்த நிலையில், அமெரிக்க சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புடினை நேற்று முன்தினம் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு அதிபர்கள் இடையே விரைவில் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய அதி பரின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகரும், அமெரிக்காவுக்கான முன்னாள் ரஷ்ய துாதருமான யூரி உஷாகோவ், நேற்று பேட்டி அளித்தார். அப்போது ''அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தேதி மற்றும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்,'' என, குறிப்பிட்டார். இதற்கடுத்த சில மணி நேரங்களில், டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து புடினே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கு, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பொதுவான இடமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். கடந்த, 2021ல் ஜெனீவாவில், ஜோ பைடன் - - புடின் சந்திப்புக்கு பின், அமெரிக்க - ரஷ்ய அதிபர்கள் சந்திப்பது இது முதல்முறையாகும். புடினும், டிரம்பும், இதற்கு முன் கடைசியாக, 2019ல் ஜப்பானில் நடந்த ஜி - 20 மாநாட்டில் சந்தித்தனர். ஆனால், தொடர்ந்து தொலைபேசி வாயிலாக இருவரும் பேசியுள்ளனர்.