நேபாளில் சமூக ஊடகத்துக்கு நேபாள அரசு தடை விதித்ததால்.பெரும் கலவரம்: 19 பேர் பலி
காத்மாண்டு : சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்த கோபத்தில் நேபாள பார்லிமென்ட் வாயிலை எரித்து மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில், 19 பேர் உயிரிழந்தனர். கண்டதும் சுட ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில், சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் வகுக்குமாறு அரசுக்கு அங்குள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி விதிகளை உருவாக்கிய அரசு, அதன் கீழ் சமூக ஊடகங்கள் பதிவு செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது. ஆனால், சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறு பதிவு செய்யவில்லை. இதனால், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யு டியூப், எக்ஸ் உட்பட, 26 சமூக ஊடக தளங்களை அரசு முடக்கியது. டிக்டாக், நிம்பஸ், போபோ லைவ், வைபர் போன்ற சில தளங்கள் பதிவு செய்ததால் அவை முடக்கப்படவில்லை. வெறுப்பு பேச்சு, வதந்திகள், இணைய குற்றங்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என அரசு கூறியது. ஆனால், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதை ஏற்கவில்லை. நாடெங்கும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட்டை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது மோதல் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, ரப்பர் தோட்டாக்களை சுட்டனர். போராட்டம் பல ஊர்களுக்கு பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டது. போலீசுடன் நடந்த மோதலில் 19 பேர் பலியானார்கள்; 250க்கு மேலானவர்கள் காயம் அடைந்தனர். சமூக ஊடகங்கள் இல்லாத உலகத்தை எவரும் கற்பனை செய்ய முடியாத இந்த காலகட்டத்தில், இப்படி தடை விதிப்பது அபத்தம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அரசின் தடை காரணம் என்றாலும், அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் காரணமாக மக்கள் அடைந்துள்ள கோபமும் இதில் வெளிப்படுவதாக கூறப் படுகிறது. ஏற்க முடியாது ஒரு தனி மனிதன் வேலை இழப்பதைவிட தேசத்தின் சுதந்திரம் பெரியது. சட்டத்தை மீறுவது, அரசியல் சாசனத்தை புறக்கணிப்பது போன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. கே.பி. சர்மா ஒலி நேபாள பிரதமர் அமைச்சர் ராஜினாமா கலவரத்தை அடுத்து, நேபாள அமைச்சரவை அவசரமாக கூடி விவாதித்தது. உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சமூக ஊடக தடை உத்தரவை வாபஸ் பெறவும் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.