உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்திய நடிகர் உணவகத்தில் 2வது முறையாக துப்பாக்கிச்சூடு

கனடாவில் இந்திய நடிகர் உணவகத்தில் 2வது முறையாக துப்பாக்கிச்சூடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: காமெடி நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான கனடாவில் உள்ள கப்ஸ் கேப் என்ற உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக நடந்த துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கபில் சர்மா. நகைச்சுவை நடிகர், டிவி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளான தி கபில் ஷர்மா ஷோ மற்றும் காமெடி நைட்ஸ்வித் கபில் ஆகியவற்றின் மூலம் பிரபலமானார்.இவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக கப்ஸ் கேப் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணகவம் மீது கடந்த ஜூலை9 ம் தேதி மர்ம நபர் 9 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினான். ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளான். இது பற்றி கனடா போலீசார் விசாரித்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட இந்த உணவகம், மீண்டும் கடந்த மாதம் 20ம் தேதி திறக்கப்பட்டது. போலீசார் இங்கு வந்து உணவருந்திவிட்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கபில் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து போலீசுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஒரு மாதமே ஆன நிலையில், இன்று மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல் வருகிறது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த சம்பவத்துக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னாயுடன் தொடர்புடைய கோல்டி தில்லான் பொறுப்பு ஏற்றுள்ளான். இது குறித்து ஆன்லைனில் அவன் அறிக்கை வெளியிட்டு உள்ளான். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை உறுதி செய்த போலீசார், கண்ணாடி, ஜன்னல் சேதம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !