புதுடில்லி, . 15- பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்திய துாதரை தொடர்புபடுத்தி அந்நாட்டு அரசு கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலடி கொடுத்து விரிவான அறிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான கனடா துாதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. உச்சகட்ட அதிரடியாக, கனடாவுக்கான இந்திய துாதரை திரும்பப் பெறுவதாக அறிவித்த மத்திய அரசு, நம் நாட்டில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.� வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு செப்டம்பரில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன.இந்நிலையில், ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்ததுடன் சில நிமிடங்கள் பேசினர்.இது குறித்து கருத்து தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடா நாட்டவர்களின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் அடிப்படை கடமை. அதில் தான் நானும் கவனம் செலுத்தி வருகிறேன்' என, குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து, கனடா நாட்டினரின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் ட்ரூடோ வலியுறுத்தியதாக பரவலாக பேச்சு எழுந்தது. இதை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது.இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும், நம் வெளியுறவுத் துறை நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவுக்கு எதிரான மனநிலையுடன் ட்ரூடோ செயல்படுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது.இது அடங்குவதற்குள், டில்லியில் உள்ள கனடா துாதரகத்தின் துணை துாதரக அதிகாரியும், துாதரக பொறுப்பு அதிகாரியுமான ஸ்டீவர்ட் வீலரை, நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு நேற்று நேரில் அழைத்து, மத்திய அரசு தரப்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து நம் வெளியுறவுத் துறை கூறியுள்ளதாவது:கனடாவில் ஏற்கனவே பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் வன்முறைகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசில், அங்குள்ள நம் துாதரக அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.நம் துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கனடா அரசு கூறியுள்ளது. ஆனால், அங்குள்ள சூழ்நிலை அதை உறுதி செய்வதாக இல்லை. நம் துாதர் மீதே பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நம் துாதரக அதிகாரிகள் அங்கு இருப்பது அவர்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்துவிடும். தற்போதுள்ள ட்ரூடோ அரசின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை.அதனால், கனடாவில் உள்ள நம் துாதரை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, நம் நாட்டில் உள்ள கனடாவைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள் ஸ்டீவர்ட் வீலர் உட்பட ஆறு பேரை, வரும் 19க்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கனடா பார்லிமென்டுக்கு அடுத்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு வெகுவாக சரிந்து வருகிறது. அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என்று அந்த நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.கனடாவில், இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிகப் பெரும் பேரடியாக இருக்கும் என, கருதப்படுகிறது.கனடாவின் மொத்த மக்கள் தொகை, நான்கு கோடி. இதில் இந்தியர்கள் மட்டும் 18 லட்சம் பேர் உள்ளனர்.
ஓட்டு வங்கி அரசியல்: மத்திய அரசு விளாசல்
நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கனடாவிடம் இருந்து துாதரக தகவல் ஒன்று பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதில், அந்த நாட்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் சில துாதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த அபத்தமான குற்றச்சாட்டை இந்தியா மறுக்கிறது. இதை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் ஓட்டு வங்கிக்கான அரசியல் நோக்கமாகவே பார்க்கிறோம்.இந்தியா குறித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு செப்டம்பரில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பலமுறை நினைவூட்டல் செய்தும், இதுவரை அது தொடர்பாக ஒரு துரும்பளவுகூட ஆதாரங்களை கனடா வழங்கவில்லை. இதிலிருந்து, விசாரணை என்ற பெயரில், தன் அரசியல் லாபத்துக்காக இந்தியாவின் பெயரை வீணாக இழுக்க முயற்சி நடப்பதாகவே கருதுகிறோம்.இந்தியாவுக்கு எதிராக ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்பது, பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கடந்த 2018ல் வந்தபோது, தன் ஓட்டு வங்கி அரசியலை தக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால், அது அவருக்கு எதிராகவே அமைந்தது.இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், 2020ல் நேரடியாக தலையிட்டது, அவர் இந்தியா மீதான வெறுப்பில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்துள்ளது. அந்தக் கட்சி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பிரிவினைவாத கொள்கையை ஊக்குவித்து வருவது அனைவருக்கும் தெரியும்.தன் நாட்டில் இருந்து செயல்படும் பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது, ஜஸ்டின் ட்ரூடோ அரசு. இது தொடர்பாக பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். குறிப்பிட்ட சில பயங்கரவாதிகளை நாடு கடத்தும்படியும் கோரியுள்ளோம். ஆனால், இவற்றில் ட்ரூடோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.அன்னிய சக்திகள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றன என்ற விமர்சனத்துக்கு ட்ரூடோ அரசு ஆளாகியுள்ளது. அந்த சக்தி எது என்பது தெரிந்தும், இந்தியாவின் பெயரை தேவையில்லாமல் இழுத்து, அவர் தப்பிக்க பார்க்கிறார்.கனடாவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்த பிரிவினைவாதிகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். பேச்சு சுதந்திரம் என்று காரணம் காட்டி, அதை கட்டுப்படுத்த ஜஸ்டின் ட்ரூடோ அரசு தவறிவிட்டது.கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மா, 36 ஆண்டு கால சிறப்பான பணி அனுபவம் உள்ள மூத்த அதிகாரி. ஜப்பான், சூடான் துாதராகவும், இத்தாலி, துருக்கி, வியட்னாம், சீனா போன்ற நாடுகளிலும் பணியாற்றியவர். அவர் மீது கனடா அரசு கூறியுள்ள கருத்து நிராகரிக்கப்படுவதுடன், கண்டிக்கத்தக்கது.இந்தியாவில் உள்ள கனடா நாட்டு துாதரகம், அந்நாட்டு அரசின் அரசியல் கொள்கைகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. துாதரக உறவு என்பது இருதரப்பானது. தற்போது, நம் நாட்டு துாதர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கனடா முன்வைத்துள்ளது. இதில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை தற்போது இந்தியாவுக்கு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.