உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் - புடின் பேச்சு நடத்த முடிவு

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் - புடின் பேச்சு நடத்த முடிவு

வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, ரஷ்ய அதிபர் புடினை ஹங்கேரியில் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒருபகுதியாக, கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்து பேச்சு நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், தன் சமூக ஊடக பதிவில் அறிவிப்பு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: ரஷ்ய அதிபர் புடினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புடினை, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளேன். இருப்பினும் சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை. அநேகமாக இரண்டு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். புடினை சந்தித்த பின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்திக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது, புடினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புடின் - டிரம்ப் சந்திப்புக்கு முன்னதாக அடுத்த வாரம், இரு நாட்டு உயர்மட்ட ஆலோசகர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை