உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப் கூடுகிறது பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம்

வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப் கூடுகிறது பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம்

புதுடில்லி:அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் நடக்கும் 'பிரிக்ஸ்' அமைப்பின் உச்சி மாநாட்டில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இதே போல, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதித்தார். இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில், நாளை மறுதினம் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கிறது. இதில், நம் வெளியுறவு அமைச்சருமான ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இந்த தகவலை நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று உறுதிப்படுத்தியது. இந்த கூட்டத்தில், அமெரிக்க வர்த்தக கொள்கை மட்டுமின்றி, வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் தலைவர்களை ஓரணியில் திரட்டவும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தவிர, உறுப்பினர் நாடுகளும் உள்ளன. டிரம்ப் ஆலோசகருக்கு கண்டனம் 'இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் பார்க்கின்றனர்' என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, நம் அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி பேதமின்றி கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து நேற்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''பீட்டர் நவ்ரோவின் தவறான கருத்துகளை பார்த்தோம். இது முற்றிலும் தவறானது. இதை வெளிப்படையாக நிராகரிக்கிறோம்,'' என்றார். சமூகத்தில் மிகப் பெரிய பணக்காரர்களாகவும், உயர்ந்த அந்தஸ்திலும் இருப்பவர்களை, 'பாஸ்டன் பிராமணர்'கள் என்று அழைப்பது அமெரிக்காவில் வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி