உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  2 ஆண்டில் 20 பதக்கங்கள் வென்று வில்வித்தையில் அசத்தும் ஆத்யா

 2 ஆண்டில் 20 பதக்கங்கள் வென்று வில்வித்தையில் அசத்தும் ஆத்யா

- நமது நிருபர் -: சிறுவயதிலேயே குழந்தைகள் ஒரு விளையாட்டின் மீது ஆர்வம் காட்டும் போது, பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டால் அந்த விளையாட்டில் குழந்தை பிற்காலத்தில் ஜொலிப்பது உறுதி. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர் ஆத்யா தேவதிகா, 13. மங்களூரில் வசிக்கும் சுமன் - சுஷ்மா தம்பதி மகளான ஆத்யா, வில்வில்தையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டிகளில், 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதுகுறித்து ஆத்யா கூறியதாவது: எனக்கு, 5 வயது இருக்கும் போது பள்ளியில், வில்வித்தை போட்டி தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. அதில் பெற்றோருடன் பங்கேற்ற பின், வில்வித்தை போட்டி மீது ஆர்வம் ஏற்பட்டது. மூங்கிலால் செய்யப்பட்ட வில்லில் தான் முதன்முதலில் பயிற்சி செய்தேன். எனது ஆர்வத்தை பார்த்த பெற்றோர் முறையான பயிற்சிக்கு சேர்த்து விட்டனர். எனது பயிற்சியாளர், 'ப்ரீஸ்டைல் காம்பவுண்ட்' வில் பயன்படுத்த பயிற்சி கொடுத்தார். தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயிற்சி இருக்கும். இந்த விளையாட்டை விளையாட பொறுமையும், கவனமும் அதிகம் தேவைப்பட்டது. களத்தில் இருக்கும் போது எனது கண்கள் இலக்கின் மீதே இருக்கும். மையப்புள்ளியை தாக்குவது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. விளையாடும் போது, வில் - அம்பு தான் எனது உலகம். இந்த உலகத்தையே மறந்து விளையாட்டின் மீது கவனம் செலுத்தி விடுவேன். பத்து வயதில், முதல் தேசிய பதக்கம் வென்றேன். அதை என்னால் மறக்கவே முடியாது. நான் விளையாட ஆரம்பித்த புதிதில் தந்தைக்கு என் மீது நம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருந்தது. நான் வெற்றி பெற ஆரம்பித்த பின், என் முதுகில் தட்டி கொடுத்து, எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். உன்னுடன் எப்போதும் இருப்போம் என்று ஊக்கம் அளித்தார். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை