மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா
பெரியவரே... உம் வேஷம் இந்த காட்சியில் வரவேண்டிய பெரியவர் போல் இல்லையே? நீ மட்டும் என்ன 'அந்த' கர்ணனா... 'அவியல்' கர்ணன்தானே? சரி... சரி... என் கேள்விக்கு பதில் சொல்லும்; எது பற்றியும் யோசிக்க விரும்பாத மக்கள் வாழும் இம்மண்ணில் நான் எதற்காக வாழ வேண்டும்? 'மய்ய' மனிதனாய் புலம்பாதே கர்ணா; புரியும்படி கேள்! அய்யா... நம் மண்ணில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் திருமண மண்டபங்களுக்கு கட்சித் தலைவர்களின் பெயர் சூட்டப்படுகிறது; அதிகார வர்க்கத்திற்கு வசதிப்படும் நாளில் திறப்பு விழா; அன்றே, நுாற்றுக்கணக்கான ஹிந்து மத ஏழை ஜோடிகளுக்கு திருமணம்; அதெப்படி... புரிகிறது கர்ணா; 'அத்தனை மணமக்களின் ஜாதகமும் குறிப்பிட்ட நாளின் முகூர்த்தத்திற்கு பொருந்திப் போவது எப்படி' என்று கேட்கிறாய்! அது மட்டுமில்லை பெரியவரே... பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு இப்படியான இலவச திருமணங்களை ஏன் இந்த தலைவர்கள் நடத்தி வைப்பதில்லை; பிற மதத்தினரில் யாரும் ஏழை இல்லையா அல்லது அம்மத மரபுகள் இப்படி மீறப்படுவதை அம்மதத்தினர் விரும்புவதில்லையா? சபாஷ் கர்ணா; இதுபோல் எதையும் நான் யோசித்ததில்லை; ஆனால், இன்று யோசிக்கிறேன்... மக்கள் மனதில் இன்றும் வாழும் அண்ணாதுரை சுமந்திருந்த 'தளபதி' பட்டத்தை, ஸ்ரீரங்கத்தில் மேடையேற்றிய தன் முதல் நாடகத்தின் பெயராகவும், 'ஏய்... தளபதி' எனும் வசனமாகவும் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக, அன்று கவிஞர் வாலியை மிரள வைத்தது தொண்டர் படை. இன்று, நடிகர் வரை அப்பட்டம் இடம்மாறி வந்திருப்பதை அப்படை எப்படி அனுமதித்தது என்பது பற்றி இன்று இப்போது யோசிக்கிறேன்! அபாரம்... இனி சொல்லுங்கள்... இம்மக்களுக்கு மத்தியில் நான் வாழ வேண்டுமா பெரியவரே? உன் ஆதங்கம் புரிகிறது கர்ணா... ஆனால், நான் உன்னை சாகவிட மாட்டேன். மிகச்சிறந்த ' இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் நான் உன்னை காப்பாற்றுவேன்; இது சத்தியம்! ஒரே ஒரு வேண்டுகோள்... நீ பிழைத்தபின் சந்தோஷத்தில் 'விசில்' அடிக்கக் கூடாது; உன்னைப் பேட்டி காண நான் அனுப்புவோரிடம், 'மாண்புமிகு தமிழக...' என்றே நீ பேசத் துவங்க வேண்டும். செய்வாயா? அய்யோ அர்ஜூனா... அம்பு விடேன்டா!