உள்ளூர் செய்திகள்

முதல்வரே... நன்றி

இச்செய்தி வெளியான 12 மணி நேரத்திற்குள்... செய்தி: 'பட்டாசு கிடங்கு' விபத்தில் உடல் சிதைந்து கணவர் பலியாக, 'முதல்வர் பொது நிவாரண நிதி' கேட்டு நான்கு ஆண்டுகளாக தவிக்கும் மனைவி! பிப்ரவரி 22, 2026ல் வெளியான நமது 'முதல்வரே... ஒரு நிமிஷம்' பகுதியில், கள்ளக்குறிச்சி க.மாமனந்தல் கிராமத்தில் மார்ச் 14, 2022ல் நிகழ்ந்த 'பட்டாசு கிடங்கு' விபத்து பற்றியும், அதில் பலியான தொழிலாளி ஏழுமலை பற்றியும், கிடங்கின் உரிமையாளர் தரப்பு இழப்பீடு அளிக்காதது பற்றியும் ஏழுமலையின் மனைவி கடலுார் ரத்தினாம்பாள் கண்ணீர் மல்க பேசியிருந்தார். 'முதல்வர் பொது நிவாரண நிதி வேண்டிய தன் மனுக்கள் என்னவானது ' என்றும் முதல்வரிடம் நியாயம் கேட்டிருந்தார். அரசு நடவடிக்கை: செய்தி வெளியான அன்றே கடலுார் ஆட்சியர் உத்தரவுப்படி, அங்கு செட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சில ஆவணங்களை ரத்தினாம்பாளிடம் கேட்டு உறுதிப் படுத்த, மறுநாள் இரவு 7:30 மணிக்கு, 'முதல்வர் பொது நிவா ரண நிதி அளிப்பது தொடர்பாக உங்களது வங்கி கணக்கு விபரம் தேவை' என்று ஆட்சியர் அலுவலகம் கேட்டிருக்கிறது. 'சொன்னதைச் செய்தது' முத்து வேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு. பிப்ரவரி 24ம் தேதி காலை வருவாய் துறை அதிகாரிகள் இல்லம் தேடி வரும் தகவல் ரத்தினாம்பாளுக்கு சொல்லப்பட, வாசலிலேயே காத்திருந்தவரை மதியம் 2:00 மணிக்கு சந்தித்து இருக்கிறார் கடலுார் மாவட்ட கோட்டாட்சியர் சுந்தர்ராஜன்; அவருடன், பண்ருட்டி மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன். அடுத்த சில நிமிடங்களில், நான்கு லட்சம் ரூபாய்க்கான காசோலை ரத்தினாம்பாளிடம் வழங்கப்பட்டது. ரத்தினாம்பாளின் நன்றி: முதல்வரே... 'தமிழ் அச்சு ஊடகத்தின் முன்னத்தி ஏர்' என்று உங்களால் கொண்டாடப்படும் 'தினமலர்' நாளிதழ் மூலம், 'எனது மனுவிற்கான விடியல் எப்போது' என்று கேட்டிருந்தேன்; இத்தனை விரைவாய் 'விடியல்' தந்ததற்கு மிக்க நன்றி; ஆயுள் உள்ளவரை தங்களை மறக்க மாட்டேன். 'தினமலர்' நாளிதழே... மக்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாய் உன்னை கொண்டாடுவதை கேட்டிருக்கிறேன். நான் சொல்கிறேன்... எனது நா ன்காண்டு ஏக்கத்தை 48 மணி நேரத்தில் தீர்த்து வைத்த நீ, மக்கள் நாளிதழ்; மக்களின் குறை தீர்க்கும் நாளிதழ். மக்களின் நலன்காக்க விரும்பும் நம் முதல்வருக்கு என் போன்றோரின் குறைகளை தொடர்ந்து தெரியப் படுத்து; நன்றி .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !