உள்ளூர் செய்திகள்

முதல்வரே... ஒரு நிமிஷம்!

பரிதாபமாய் இரு பிஞ்சுகள்செய்தி: திருச்சி சமயபுரம் கோவில் மண்டப கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து பெண் உயிரிழப்பு! அநீதி: தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளின் எதிர்கால நலனை கண்டுகொள்ளாத தமிழக அரசு! முதல்வரே... 'தமிழக கோவில்களில் மேற் கொள்ளப்படும் ரகசிய ஆய்வுகளின் மூலம் சீர் திருத்தங்கள் செய்யப்படும்' எனச்சொல்லும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் எங்களுக்கு நீதி வழங்கச் சொல்வீர்களா? தஞ்சாவூர், கீழதிருப்பந்துருத்தியில் வசிக்கும் நான் முருகேசன்; இவர், என் மனைவி கனகமணி. ஜூலை, 2022ல் கும்பாபிேஷகம் கண்ட திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, கடந்த மார்ச் 28ம் தேதி பாதயாத்திரையாய் சென்ற என் 33 வயது மகள் நதியா, அன்றிரவு கோவிலின் நுழைவாயில் மண்டப கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததில் பலியாகி விட்டார். சமயபுரம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., எண்:114/2026ன் கீழ், பி.என்.எஸ்.எஸ்.,194 சட்டப்பிரிவில் வழக்கு பதிவானது. என் மகள் உயிருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் தந்து ஒதுங்கி கொண்டது கோவில் நிர்வாகம். அறநிலையத்துறை ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கேட்டு அனுப்பிய மனுவுக்கு பதில் இல்லை; இதனால், ஜூன் 8ம் தேதி உங்கள் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம்; அதற்கும் பலனில்லை! 'முந்தைய அரசின் அலங்கோலங்களை இந்த அரசு சீர் செய்து வருகிறது' என உங்கள் அரசு சொல்வது உண்மை எனில், என் 11 வயது பேரன், 4 வயது பேத்தியின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தாருங்கள்; என் மகளின் மரணத்திற்கு உரிய நீதி கொடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !