கல்லும் கலையும்: அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஆதி கொற்றவை
பல்லவர்களும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும் கொற்றவையை சிம்ம வாஹினியாய் காட்சிப் படுத்த, நமது தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கலைமான் வாகனத்துடன் இவள் நிற்கிறாள். ராஜபாளையம் - சங்கரன்கோவில் செல்லும் வழியிலுள்ள பெருமாள்பட்டி கிராம மானது, விருதுநகர் - தென்காசி மாவட்டங் களின் எல்லைப் பகுதி; இங்கு, ஆறு ஆண்டு களுக்கு முன் விளை நிலத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறாள் இவள்! 'கலையழகு மின்னும் சிற்பநயம், 'முற்கால பாண்டியர்களின் காலத்தைச் சேர்ந்தவள் இவள்' என்கிறது. 'இதுவரை கிடைத்த கொற்றவை சிற்பங்கள் எருமை தலை மற்றும் சிங்க வாகனத்துடன் கிடைத்திருக்க, கலைமான் வாகனத்துடன் இவள் இருப்பது, 'காலத்தால் மூத்தவள்' என்பதைக் காட்டுகிறது' என்கிறார் தொல்லியல் ஆய்வாளரான உதவிப் பேராசிரியர் கந்தசாமி. கொற்றவைக்கு பின்னால், முறுக்கிய கம்பி போல வளைந்த கொம்புகளுடன் கலைமான் மிடுக்காக நிற்கிறது. சிரசில் கரண்ட மகுடம், காதுகளில் மகர குண்டலங்கள், இடையில் அணிகலன்கள் உடன் பட்டாடை தந்து, கொற்றவையை 'குலத்தலைவி'யாக்கி இருக்கிறார் சிற்பி. 'குலம் காக்கும் வீராங்கனை இவளே' என்பதை பறைசாற்ற, மார்பில் 'சன்ன வீரம்' எனும் அணிகலன் உள்ளது. நிலத்தில் கண்டெடுக்கையில் நான்கு கரங்களும் உடைந்திருக்க, தற்போது பின்னிரு முழங்கைகளும், வலது முழங்கையும் பொருத்தி கிராம மக்கள் வழிபடுகின்றனர்.