மூடிய கிணற்றின் மீது கட்டுமானம் சாத்தியமா? வாசகர்கள் கேள்விகளுக்கு பொறியாளர் பதில்
* மண் போட்டு மூடிய கிணற்றின் மேல், ஒரு 'ஒர்க் ஷாப் ஷெட்' கட்டலாம் என்று இருக்கிறேன்; வேண்டாம் என்று சொல்கிறார்கள். எனது விருப்பத்தை நிறைவேற்றலாமா? -ரவி, தாராபுரம்.
மண் கொண்டு மூடிய கிணற்றை , எந்த மாதிரி மண்ணை கொண்டு மூடினார்கள், குப்பை கழிவுகளை கொண்டு மூடினார்களா, பழைய கட்டட கழிவுகளை கொண்டு மூடினார்களா என்று அறிந்து கொண்டால், அதற்கு தகுந்த மாதிரி 'பவுண்டேஷன் டிசைன்' செய்து கட்டலாம். அறியாவிட்டால் பாதுகாப்பு முறைகளை, கட்டாயம் கையாள வேண்டும். 'கால்வேலியம் சீட் ஷெட்' அமைத்துக்கொள்ளலாம். ரேப்ட் ஆர்.சி.சி., பவுண்டேஷன் முறையில் அமைக்கலாம். கிணறு இருந்த பகுதி முழுவதும், நிலத்தின் கீழ் எப்போதும் நீர் புகா வண்ணம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். நீர் புகுந்தால் முறையற்ற இறக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தகுந்த கட்டமைப்பு பொறியாளர் மேற்பார்வையின் கீழ், இந்த பணியினை மேற்கொள்வது நல்லது. ஆர்.சி.சி., கட்டடம் கட்டினால், அதிக செலவு மற்றும் 'செட்டில்மென்ட்' வாய்ப்புகள் ஏற்படும்; எனவே, தவிர்ப்பது நலம்.* ஏற்கனவே இருந்த பழைய தார்ஸ் கட்டடத்துடன், ஒரு புதிய கட்டடம் கட்டியுள்ளேன். புதிய கட்டடம் தரமாக உள்ளது. ஆனால், பழைய புதிய கட்டடம் இணையும் இடத்தில், நீர் கசிவு ஏற்படுகிறது. இது எதனால்? -முருகன், சுந்தராபுரம்.
ஏற்கனவே உள்ள கட்டடத்தை புதிய கட்டடத்துடன் இணைக்க கவனமாக திட்டமிடல் தேவை. சுமை தாங்கும் காரணிகள், கட்டடத்தின் நீளம் மற்றும் எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏற்கெனவே, மொட்டை மாடியில் நீர் செல்லும் வாட்டம் எவ்வாறு உள்ளது, நீங்கள் அதனை மாற்றியுள்ளீர்களா என்று குறிப்பிடவில்லை. அதனையும் சரி செய்ய வேண்டும். புதிய கான்கிரீட் சுருங்கக்கூடிய தன்மை உடையது. அது நீர்க்கசிவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனை, தரமான நவீன கட்டட கெமிக்கல்கள் கொண்டு, எளிதாக தீர்வு காணலாம். அதற்காக தகுந்த பொறியாளரை கொண்டு, வாட்டர் ப்ரூப் பணிகள் செய்ய வேண்டும்.* காலம் கான்கிரீட் அல்லது பைல் கான்கிரீட் இதில் எது சிறந்தது? -விஸ்வநாதன், வடவள்ளி.
பூமியின் தன்மையை பொருத்து, இம்முறைகள் வேறுபடும். பூமி களிமண்ணாக இருந்தால் பைல் கான்கிரீட் முறையே சிறந்தது. அஸ்திவாரம் தோண்டும் போது பூமியின் கடினத்தன்மை ஐந்தடி அல்லது ஆறடியில் இருந்தால், காலம் கான்கிரீட் முறையே சிறந்தது. நிலத்தின் கடின தன்மையை அறிய, சிறந்த பொறியாளரிடம் மண் பரிசோதனை செய்து, அதன் பிறகு முடிவு எடுப்பது சிறந்தது.* வீடு கட்டும்போது சுவர் முழுவதும் கட்டி முடிக்காமல் தரைத்தளம் போடலாமா? -கருப்புசாமி, சுங்கம்.
பி.சி.சி., போட்டுவிட்டு சுவர் கட்டும் முறையே சிறந்தது. ஏனெனில் கட்டுமான வேலை மற்றும் பூச்சு வேலை முதலியவற்றுக்கு பயன்படுத்தும் கலவை கிழே விழும். அதை வீணாகாமல் பயன்படுத்தலாம்.* நான் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு, கம்பி இணைப்புகளுக்கு 'திரெட்டிங் கப்ளர்' முறையை பயன்படுத்தலாம் என பொறியாளர் கூறுகிறார். இது சரியான முறையா? -குமாரசாமி, ஜி.வி. கார்டன்.
* மிகச்சரியான முறையே. தரமான கப்ளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் கம்பிகளை வளைத்து, உபயோகப்படுத்த வேண்டியது இல்லை. இம்முறையில் 'லேப் லென்த்'துக்கான கம்பியின் நீளம் மிச்சம். ஆட்களுக்கு வேலையும் சுலபமானது.