உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: ஓடி விளையாடினால் எலும்பு உடையாது!

தடுமாறி விழுந்தால், விபத்தில் சிக்கினால், படிகளில் ஏறும் போது கால் பிசகினால், சற்றே பயத்துடன் அனைவரும் கேட்கும் கேள்வி, 'பிராக்சர் இல்லையே?' அதிலும் விளையாடும் போது, குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் கேட்கவே வேண்டாம். மொத்த வாழ்க்கையும், இருண்டது போன்ற உணர்வு வந்து விடுகிறது. எலும்பு முறிவிற்கு இத்தனை துாரம் பீதியடைய வேண்டிய தேவை இல்லை.எலும்பு முறிவு என்பது நோய் இல்லை. முன்பு சாதாரணமான விஷயமாக இருந்ததை, பெரிய பிரச்னை போல செய்து, பெற்றோரை அச்சமடைய செய்து விட்டது நவீன மருத்துவம்.எலும்பு முறிவுக்கு சிகிச்சையே தேவை இல்லை. உடைந்த இரண்டு பாகங்களை சரியாகப் பொருத்தி, அசையாமல் கட்டுப் போட்டாலே போதுமானது. உடைந்த பகுதியில் திசுக்கள், எலும்பு மஜ்ஜையில் உள்ள மூல (ஸ்டெம்) செல்கள், நோய் எதிர்ப்பு சக்தியின் கட்டளைக்கு ஏற்ப, உடைந்த இடத்தில் வந்து புதிய செல்கள் உற்பத்தி செய்யத் துாண்டுகிறது. உடைந்த இரு முனைகளிலும், புதிய எலும்பு வளர்வதற்கும், குருத்தெலும்பு வளர்வதற்கும் இது உதவுகிறது.இது இயல்பாக நடக்கும் விஷயம். நீரிழிவு கோளாறு, சிறுநீரக, இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மயக்க மருந்து, வலி நிவாரணிகள் கொடுத்து ஆப்பரேஷன் செய்யும் போது, நிறைய பிரச்னைகள் ஏற்படலாம். தவிர, உடைந்த இரு பகுதிகளை இணைக்க, நன்றாக இருக்கும் எலும்புகளில் துளையிட்டு, உலோகத் துண்டுகளால் இணைப்பர்; வாழ்நாள் முழுவதும் இது உடம்பிற்குள் இருக்கும். இயல்பாக வளர வேண்டிய ஒன்றை, வளர விடாமல் செய்து விடுவர்.எலும்பு முறிவே ஏற்படாமல் தவிர்க்க முடியும்.குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்காமல், நன்றாக ஓடியாடி, விளையாட அனுமதிக்க வேண்டும். இரண்டு அடி உயரத்தில் இருந்த குதித்து விளையாட வேண்டும். கால்ஷியம் தாதுவால் ஆன எலும்புகள் வலிமையாக வளர்வதற்கு இது உதவும். ஜிம்னாஸ்டிக், யோகா போன்று, உடலை நன்றாக வளைத்து செய்யும் பயிற்சி, எலும்புகளின் வலிமைக்கும், வளையும் தன்மைக்கும் உதவும்.குரங்குகள் தினமும் மரத்திற்கு மரம் தாவி விளையாடுகிறது; மரத்திலிருந்து கீழே குதிக்கிறது. அவற்றின் எலும்புகள் உடைவதில்லை. இது போன்ற பயிற்சிகளை, குழந்தைப் பருவத்தில் இருந்தே செய்யும் போது, கீழே விழுந்தாலும் ஒன்றும் ஆகாது. பயிற்சி செய்ய செய்ய, எதிர்பாராமல் நடக்கும் விஷயத்தையும் எதிர்கொள்ளும் தன்மை, கவனம் வந்து விடும்.எந்த வயதினராக இருந்தாலும், உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்லாவிட்டால், 45 நாட்களில், உடல் எடையை இயல்பாக தாங்கும் அளவிற்கு, உடைந்த எலும்புகள் இணைந்து சேர்ந்து விடும்.ஐந்து, ஆறு முறை கட்டுகளை மாற்றி, தினமும் கட்டுக்குள் மூலிகை எண்ணெய் விடுவோம். உடைந்த எலும்புகள் சேருவதற்கு இது போல, ஆதரவான செய்கைகள் போதுமானது.டாக்டர் ஆர்.எஸ்.வேலுமணி பாரம்பரிய எலும்பு முறிவு மருத்துவர், சென்னை.srsvelmani@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !