இப்படியும் ரெப்ரிஜிரேட்டரை பயன்படுத்தலாம்!
இன்று, பெரும்பாலான இல்லங்களில், தவிர்க்க முடியாத பொருளாக இருப்பது ரெப்ரிஜிரேட்டர். அதை வைத்திருக்கும் பலருக்கும், 'எப்படி பயன்படுத்தினால் நன்மை' என்ற சூட்சுமம் தெரிவதில்லை. ரெப்ரிஜிரேட்டரை சூரிய ஒளி படாத இடத்தில் வைத்திருப்பது அவசியம். முடிந்தவரை சமையல் அறையில் வைக்காமல் இருப்பது நல்லது. சுவரில் இருந்து ஆறு அங்குல இடைவெளி விட்டு வைத்திருக்க வேண்டும். பின்புறமுள்ள 'கூலர்' குழாய்களில் காற்றோட்டம் கிடைக்க இந்த இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.ரெப்ரிஜிரேட்டரை, வெப்பம் வெளியிடும் கருவிகளுக்கு அருகில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கூலர் காயிலில் படிகிற தூசுகளை அவ்வப்போது நீக்க வேண்டும். எளிதாக மோசமாகி விடும் உணவுப் பொருட்களை 'பிரீசர்' அருகில் இருக்கும் தட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். உணவு வகைகளைச் சூடு ஆறிய பின்பே, பிரிட்ஜினுள் வைக்க வேண்டும்.சூடான உணவுகளை உள்ளே வைத்தால் விரைவில் குளிர்பதனப் பெட்டி மோசமாகிவிடும். பிரிட்ஜ் முன்னால் ஒரு ரப்பர் ஷீட்டை விரித்து வைக்க வேண்டும். அதன் மேல் நின்றுதான் திறக்கவோ, அடைக்கவோ வேண்டும். இவ்வாறு செய்தால் மின் விபத்து எதுவும் ஏற்படாது. பிரிட்ஜின் நிறம் மங்கினால் அதன் வெளிப்பகுதியை குளியல் சோப் பயன்படுத்திக் கழுவலாம்.பின் துடைத்துவிட்டு 'சிலிக்கான் பாலீஷ்' பயன்படுத்தி 'பாலீஷ்' செய்தால் புதிது போல் ஆகிவிடும். பிரிட்ஜினுள் பொருட்கள் வைக்கும்போது, பொருட்களிடையே போதிய காற்றோட்டம் இருக்கும் வகையில் வைக்க வேண்டும். எந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தபிறகே பிரிட்ஜைத் திறக்க வேண்டும்.அப்படிச் செய்வதால் அதிக நேரம் திறந்துவைப்பத்தைத் தவிர்க்கலாம். மிகவும் சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து அவற்றை நன்கு மூடி, பிரிட்ஜுக்குள் வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மின்சாரம் குறைந்த அளவு பயன்படுத்தப்படுவதோடு, அந்தப் பொருள் குளிரூட்டப்படும் நேரமும் குறைகிறது.பிரிட்ஜின் 'கன்டென்சர் காயில்' மீது அதிக தூசு படிந்தால், அதன் மோட்டார் மிகவும் கடினமாக இயங்குவதோடு, அதிக மின்சாரத்தையும் பயன்படுத்துகிறது. எனவே, கன்டென்ஸர் காயில் மீது நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்.ரெப்ரிஜிரேட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், அதன் பின்புறமாக, ஒரு 'டிரே'யில் சேகரமாகும். அந்த தண்ணீரை, ஒரு சில நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் வெளியேற்றி விட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, 'டிரே'வை, சுத்தமாக கழுவி, துணியால் துடைத்த பிறகே, மீண்டும் பொருத்த வேண்டும்.நீண்ட நாட்கள், 'டிரே'வில் இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படாமல் இருந்தால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், வீட்டில் 'பிரிட்ஜ்' இருப்பதன் பயனை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்.