வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக, இன்று வயது வித்தியாசம் இல்லாமல் பலரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது ஹார்ட் அட்டாக். இதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய இன்று பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டதால், பலரை காப்பாற்றி விட முடிகிறது.ஈ.சி.ஜி (இதய மின் வரைபடம்): இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளை கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதய நோய் உள்ள ஒரு சிலருக்கு, ஈ.சி.ஜி.,யில் மாறுபாடுகள் இல்லாமல் கூட இருக்கும்.மார்பு எக்ஸ்ரே: இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையையும் கண்டறியலாம்.ரத்த பரிசோதனைகள்: அடிப்படையான ரத்த பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் குறைபாடுகளையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ரத்த பரிசோதனைகள்:
மாரடைப்பு நோயால் ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிய 'சி.பி.கே - எம்.பி' என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் பாஸ்போகைனேஸ் என்ற என்ஸைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும்.இதேபோல ட்ரோபோனின் 'டி' பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான மாறுதல்கள் உள்ளனவா என்பதை கண்டறிய உதவும். எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை: இதயத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன், இதன் வாயிலாக கண்டுபிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றை கண்டுபிடித்துவிடலாம்.டிரட்மில் பரிசோதனை: சில நோயாளிகளின் இதயத்தில் உள்ள அடைப்புகளை, அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் எந்திரத்தில் நோயாளியை செயற்கையாக நடக்க வைத்து, இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை இது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை:
ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது.கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக் குழாயைச் செலுத்தி, இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் 'எக்ஸ்-ரே' உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் செய்யப்படுகிறது. கதிர் இயக்கப் பரிசோதனை (நியூக்ளியர் ஸ்கேன்): இதய நோயாளிகளுக்கு கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் இதய தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய் அடைப்பால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.