உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம்., கவனம்

வங்கிகளில், நாம் சேமித்து வைத்திருக்கும் தொகையை எடுக்க வசதியாக, ஏ.டி.எம்., மையங்கள் வந்து விட்டன. பணம் எடுப்பதும் எளிதாகி விட்டது. வசதியாக இருக்கக் கூடிய இதில் தான், நமக்கு பாதிப்பும் காத்திருக்கிறது. பணம் எடுக்கும் போது கவனமாக இல்லாவிட்டால், மர்ம நபர்கள், அபேஸ் செய்து கொண்டு போய் விடுவர்.சிலர் ஏ.டி.எம்., கார்டை தொலைத்து விட்டு, அது தொலைந்தது கூடத் தெரியாமல் இருப்பர். திடீரென ஞானோதயம் உதித்து, தேடிப்பார்க்கும் போது, காணாமல் போனதை அறிவர். வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், பலமுறை அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு, உங்களின் பணம் திருடப்பட்டிருக்கும். ஏ.டி.எம்., கார்டின் ரகசிய எண்ணை (பின் நம்பர்) தெரிந்து கொள்ள, இன்று, பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. கார்டு தொலைந்து விட்டால், உடனடியாக, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், கார்டை தடை செய்து விடுவர்.ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்பதை, முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். நீங்கள் பணம் எடுத்த பின், மர்ம நபர்கள், அதை நோட்டமிட்டு, பணம் பறிக்கலாம். சில சமயங்களில், மையத்தில், நம் பின்னால் நிற்கும் ஆட்களோ, காவலாளி போன்று தோன்றுபவர்களோ இயல்பாக எட்டிப் பார்த்து, நம் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஒரு போதும், இதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.ஏ.டி.எம்., மையத்தை விட்டு வெளியில் வரும்போது, கார்டு இருக்கிறதா என்று, ஒருமுறைக்கு, இருமுறை பரிசோதனை செய்து கொண்டு திரும்புவது பாதுகாப்பானது. நம் ஏ.டி.எம்., மூலம் பணம் திருடுவோர், இன்று அதிகரித்து விட்டனர். பல நேரங்களில், உங்களுடைய அலைபேசிக்கு, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டின் ரகசிய எண்ணை கேட்பர். எந்த சூழ்நிலையிலும், இதுகுறித்த தகவல்களை கூறக்கூடாது. வங்கி அல்லது அது சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து, இதுபோன்று யாரும் விசாரிப்பதில்லை. அப்படி கேட்கும் பட்சத்தில், வங்கி அதிகாரிகளிடமோ, போலீசாரிடமோ புகார் தெரிவிக்கலாம்.கார்டின் ரகசிய எண்ணை, உங்கள் குடும்பத்தினர் தவிர, யாரிடம் சொல்லக் கூடாது. ரகசிய எண் மறந்து விடும் என்று, கார்டின் பின்பக்கத்தில் எழுதி வைப்பதும் மிகவும் தவறு. நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம்., கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதிலுள்ள சிப்பில்தான், விபரங்கள் பதிந்திருக்கும். உண்மையான கார்டை, ஒரு கருவியில் செருகி, அதிலுள்ள தகவல்களை எடுத்துக் கொண்டு, வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து, டூப்ளிகேட் கார்டு தயாரித்து மோசடி செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது; இதிலும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.ஏ.டி.எம்., எண், பாஸ்வேர்டை இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா? என, உறுதிப்படுத்தி கொள்வது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்த்து விட வேண்டும். போதியவரை, நீங்களே பணம் செலுத்தும் முறையை கையாளுங்கள்.ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுத்து விட்டு, மற்றவர்கள் முன்னிலையில் சரி பார்ப்பதும் தவறு. இது, திருடர்களுக்கு நல்ல தொகை கிடைத்து விட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !