உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேதம்: தோஷங்களைக் கண்டறிந்தால் இதய சிகிச்சை எளிதே

ஆயுர்வேதம்:

உணவு சரியாக ஜீரணமாகாமல், 'ஆமம்' என்ற அஜீரணத் தன்மையை அடைகிறது. இந்த ஆமம், உடல் முழுதும் பரவி, எல்லா நாளங்களையும் அடைத்து விடுகிறது. இந்த ஆமம், வாத, பித்த, கப தோஷங்களைக் கெடுத்து, இதயத்தில் வலி போன்ற துன்பங்களை உண்டாக்குகிறது

அறுபத்தி ஐந்து வயது நிரம்பிய அவருக்கு, 2004ல் அதிகாலை ஒரு மணியளவில், மாரடைப்பு வந்தது. மிகுந்த வலி, வாந்தி இருந்தது. அதன் பின், சுயநினைவை இழந்தார். சிகிச்சைக்காக, பெரிய அலோபதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதியம், இரண்டு மணியளவில், அவர்களால் நோயாளியை கையாள முடியவில்லை என கூறி, மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, 4 - 5 நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்தார். அவருடைய நிலைமை, மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவமனையில் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். மேலும் அவருக்கு, பை-பாஸ் செய்தால், ஆபத்தில் முடியும் என்று கூறினர். மீண்டும், நவம்பர், 2008ல், மாரடைப்பு வந்தது. அப்போதும், பெரிய அலோபதி மருத்துவமனையில், ஒரு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 'ஆஞ்ஜியோகிராம்' செய்த பிறகு, அவரது இதயம், 40 சதவீதம் மட்டுமே வேலை செய்கிறது. அதனால், 'பைபாஸ்' செய்வது மிகவும் ஆபத்தானது என்றனர்.

கடந்த ஜனவரி 9, 2009ல், சஞ்ஜீவனி வைத்யசாலைக்கு வந்த அவர், மிகவும் பலவீனமாக இருந்தார். அவரால், சிரமமின்றி நடக்க இயலவில்லை. இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தூக்கமின்மை, கொலஸ்ட்ரால், சிறுநீர் வெளியேறாமை ஆகிய காரணங்களுக்காக மாத்திரைகள், ரத்தம் இளக்கி என, 12 மாத்திரைகள் எடுத்து கொண்டிருந்தார். எண்ணற்ற மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், அவரது ஆரோக்கியம் மிகவும் குன்றியே இருந்தது. அதிக காரம், தயிர், டீ, காபி போன்றவை, அவரின் தினசரி உணவு. அதிக காரம், தயிர் அவரின் சர்க்கரை அளவை கூட்டியதுடன், இதய நோய்க்கு உகந்ததாக இல்லை.

இதய நோயின் காரணங்களில் முக்கியமானது உணவு. நாம் உண்ணும் உணவு, எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையற்ற உணவுகள், ஒன்றுக்கொன்று முரணான உணவுகள், உப்பு, புளிப்பு, காரம் போன்ற உஷ்ண வீரியம் உடைய உணவுகள், ஜீரணமாவதற்குக் கடினமான உணவுகள், ஒவ்வாத உணவுகள், சமைக்காத பச்சையான உணவுகள், உண்ட உணவு ஜீரணமாவதற்கு முன்பே, மீண்டும் உண்பது போன்ற உணவு பழக்கங்கள், அஜீரணத்தை உண்டாக்கும்.

இதனால், உணவு சரியாக ஜீரணமாகாமல், 'ஆமம்' என்ற அஜீரணத் தன்மையை அடைகிறது. இந்த ஆமம், உடல் முழுதும் பரவி, எல்லா நாளங்களையும் அடைத்து விடுகிறது. இந்த ஆமம், வாத, பித்த, கப தோஷங்களைக் கெடுத்து, இதயத்தில் வலி போன்ற துன்பங்களை உண்டாக்குகிறது. ஆயுர்வேத சிகிச்சை, அவருக்கு இதயநோய் மட்டுமின்றி, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உட்பட அனைத்து உபத்திரவத்திற்கும் தரப்பட்டன. மேலும், அவரின் உணவு பழக்க வழக்கங்களும் மாற்றியமைக்கப்பட்டன.

அலோபதி மருந்துகள் சிறிது,சிறிதாக குறைக்கப்பட்டன. (ரத்த அழுத்தம் 25 சதவீதம், ரத்தமிளக்கி 50 சதவீதம், கொலஸ்ட்ரால் 50 சதவீதம், சர்க்கரை வியாதி மருந்து 1/2) தூக்க மருந்தும், சிறுநீர் போவதற்கு தந்த மருந்தும், முழுவதுமாக நிறுத்தப்பட்டன. இரண்டு வாரங்களில், அவர் உடல்நிலை நன்றாக தேறியது. ஆயுர்வேத சிகிச்சை பெற்ற பின், இரண்டு மாதத்திற்குள், அவரின் ஆரோக்கியம் மற்றும் உடல் நிலை நன்றாக தேறியது. எந்தவித சோர்வும் இல்லாமல், வெகுதொலைவு நன்றாக நடக்க முடிந்தது. சர்க்கரை வியாதி உட்பட எல்லா அலோபதி மருந்துகளும் நிறுத்தப்பட்டன. பஸ்சில் எவ்வித தொந்தரவுகள் இல்லாமல், பிரயாணம் செய்யுமளவுக்கு அவரின் ஆரோக்கியம் முன்னேறியது.

டாக்டர் பி.எல்.டி.கிரிஜா,சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !