உள்ளூர் செய்திகள்

ரத்தப் பரிசோதனைக்கு தடை

காச நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை முறையை, மத்திய சுகாதாரத் துறை தடை செய்துள்ளது. இந்தியாவில், ஆண்டுதோறும் 15 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், காசநோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையின் மூலம், நோய் உள்ளதா என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடிவதில்லை என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே, இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது என, அந்நிறுவனம், அனைத்து நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்திய சுகாதாரத் துறையின், காசநோய்ப் பிரிவுத் தலைவர் அசோக் குமார் கூறுகையில், ''நம் நாட்டில், தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், காசநோயைக் கண்டறிய, ரத்தப் பரிசோதனையை மட்டும் மேற்கொள்கின்றன. இந்தப் பரிசோதனை பெரும்பாலும், தவறான கணிப்பையே கூறுகிறது,'' என்கிறார். 'காசநோயைக் கண்டறிய, நோய் உருவாக்கும் கிருமியான மைகோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ், ரத்தத்தில் உண்மையிலேயே உள்ளதா, அது வளர்கிறதா ஆகியவை, உன்னிப்பாக ஆராயப்பட்டு, பின்னரே, நோய் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்' என, கனடாவில் உள்ள, மான்ட்ரீல் பல்கலை, தொற்று நோய்ப் பிரிவுத் துணை பேராசிரியர் மதுகர் பாய் கூறுகிறார். உலகளவில், 18 வகையான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை அனைத்தும், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் உருவாகி, உலகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எந்தப் பரிசோதனையுமே, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படாதவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !