உள்ளூர் செய்திகள்

இருமல் போக்கும் வெற்றிலை!

வெற்றிலை, தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி, வெற்றிலையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போதைய நவநாகரிகம் காரணமாக, வெற்றிலை பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. இளைய தலைமுறையினர் பலருக்கு, வெற்றிலையின் பயன்பாடுகள் தெரிவதில்லை.கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் 'சி' ஆகியவற்றை கொண்டுள்ள வெற்றிலையில், மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட 'சவிக்கால்' இருக்கிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். விஷக்கடியால் ஏற்பட்ட பாதிப்பை முறிக்கும் தன்மையும் இதற்குண்டு. நுரையீரல் பலப்பட வெற்றிலைச்சாறு, 5 மி.லி.,யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி., கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. வயிற்றுவலி இருந்தால், 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், 5 வெற்றிலைகளை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி, சட்டியிலிட்டு வதக்கி பின், 100 மி.லி., நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து, ஆறியபின் வடிகட்டி கஷாயத்தை குடித்து வந்தால் வயிற்றுவலி நீங்கும்.வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அருகம்புல் ஒரு கைப்பிடி சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி., தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதை, 150 மி.லி.,யாக வற்ற வைத்து, ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி., குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும். உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று, சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும். வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.வெற்றிலை 2 அல்லது 3 எடுத்து, அதனுடன் ஐந்து நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.தேங்காய் எண்ணெயில், ஐந்து வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு, சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும். வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து, கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம். வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க, இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும். தேள் கடி விஷம் இறங்க, வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவியும் வந்தால் விஷம் எளிதில் நீங்கும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்