நீர்ச் சத்தை உணராமல் செய்யும் உருளைக் கிழங்கு சிப்ஸ்!
வயது வித்தியாசம் இல்லாமல், அனைவருக்கும் பிடித்தது உருளைக் கிழங்கு. இதில் சிப்ஸ், வறுவல், பொரியல் என்று என்ன செய்தாலும், நாக்கில் நீர் சுரக்கவே செய்கிறது. அதிலும், உருளைக் கிழங்கு சிப்ஸ் என்றால் கேட்கவே வேண்டாம். பசி அதிகம் இருக்கும் நேரங்களில் கூட, 'லைட் ஸ்நாக்ஸ்' என்று இதைத் தான் சாப்பிடுகிறோம். இதற்கு மட்டும் ஏன் இத்தனை ருசி? பொதுவாக, அனைவருக்கும் தெரிந்த விஷயம்... எதில் ருசி அதிகம் உள்ளதோ, அது உடல் நலத்திற்கு கேடானது; உருளைக்கிழங்கு சிப்சும் விதி விலக்கல்ல!எப்படி?நீர்ச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது தான், நம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. காய்கறி, பழங்களில், 80 சதவீதத்திற்கு மேல் நீர்ச் சத்து உள்ளது. சமைக்காத அரிசியில், 10 - 14 சதவீதமும்; மாவுச் சத்து மட்டுமே பிரதானமாக உள்ள முழு உருளைக் கிழங்கில், 80 சதவீதமும் நீர்ச்சத்து உள்ளன; பொரித்த சிப்சில் வெறும், 2 சதவீதம் மட்டுமே நீர்ச்சத்து இருக்கும். கோதுமை, மைதா போன்ற மாவுகளில் வெறும், 11 சதவீதமே நீர்ச்சத்து உள்ளன. அதனால் தான், வெறும் மாவை வாயில் போட்டதும், வாயில் முழுக்க ஒட்டி, வறட்சியான உணர்வைத் தருகிறது.துளி கூட நீர்ச்சத்தே இல்லாத எண்ணெயில், பொரித்த சிப்ஸ் சாப்பிடும் போது மட்டும், எப்படி வாயில் ஒட்டாமல், 'இன்னும்... இன்னும்...' என்று சாப்பிடத் தோன்றுகிறது என்றால், எண்ணெயில் பொரிக்கும் போது, மொத்த நீர்ச்சத்தும் நீங்கி, 35 சதவீதம் எண்ணெய் உறிஞ்சி, மொறு மொறுப்பாகி, நீர்ச்சத்து இல்லாததை உணர முடியாமல் செய்து விடும். அதிகப்படியான ருசிக்கு உப்பு, காரம் சேர்க்கிறோம். விளைவு... உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, செரிமானக் கோளாறுகள் என்று, பல பிரச்னைகளுக்கு வழி செய்யும். அடுத்த முறை சிப்சிற்கு பதில், அவித்த முழு உருளைக் கிழங்கை சாப்பிடலாம்.ஆதாரம்: யு.எஸ்.டி.ஏ., - 'நேஷனல் நியூட்ரியன்ட் டேட்டா பேஸ்'