நறுக்கிய பாக்கெட் காய்கறி வாங்குறீங்களா?
மனிதர்களின் வாழ்க்கை இயந்திர தனமாக மாறிவிட்டது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். சென்னை போன்ற நகரங்களில், நடுத்தரக் குடும்பத்தில், கணவனும், மனைவியும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.இது போன்றவர்கள், வீட்டில் சமைப்பது குறைகிறது; மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கி, சமைப்பது என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இவர்களைக் குறிவைத்தே, தற்போது, அலுவலக வாயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன.கேரட், பீன்ஸ், முருங்கை போன்ற காய்கறிகள் சமையலுக்கு தேவையான அளவில் வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுகின்றன. முருங்கை கீரை, துண்டித்து வைத்து விற்கப்படுகிறது. அப்பாடா... என நினைத்து, பலரும் அவற்றை வாங்கி, 'ஹேண்ட் பேக்'குகளில், திணித்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்புவது வழக்கமாகி விட்டது.'காய்கறிகளை வெட்டி சமைக்க நேரமில்லை; இது வசதியாக இருக்கிறது' என்கின்றனர் பணிக்குச் செல்லும் பெண்கள். ஆனால், இதன் பின்னணியில் உள்ள ஆபத்து அவர்களுக்கு புரியவில்லை என்கிறார், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையின், ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி.அவர் கூறியதாவது: சமைக்கும் நேரத்தில் தான், காய்கறியை நன்கு அலசிவிட்டு, தேவைக்கேற்ப நறுக்கி சமைக்க வேண்டும். அதுதான் நடைமுறை. அதை விடுத்து, தெருவோரங்கள், அலுவலக வாயில்கள் என, கண்ட இடங்களிலும் விற்கும் நறுக்கிய காய்கறிகளை வாங்கி சமைப்பது நல்லதில்லை.காரணம், எந்த தண்ணீரில் சுத்தம் செஞ்சாங்க; எத்தகைய கத்தி கொண்டு நறுக்கினாங்க; போட்டு வச்சிருக்கிற பாலிதீன் பை சுத்தமானது தானா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. காய்கறி கெட்டுப்போகாமல் இருக்க, வேதி பவுடர்கள் கலந்த தண்ணீரில் கழுவி வச்சிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்றதுக்குன்னு, பிரத்யேக பிளாஸ்டிக் பைகள் இருக்கு. அதுமாதிரி பைகளில வைக்காம, சாதாரண பிளாஸ்டிக் பைகளின் வைக்கிறதால, காய்கறியோட இயல்புத் தன்மை மாறிவிடும். வெட்டிய காய்கறிகளில், நீண்ட நேரம் ஆன, அதில் உள்ள, 'விட்டமின்-சி' சத்து போய்விடும்.நறுக்கி வைத்த காய்கறிகளில் பூஞ்சை காளான் தொற்றிடும். சாதாரணமாக அது தெரியாது; 'மைக்ேராஸ்கோப்' வச்சு பார்த்தா நல்லாவே தெரியும். இது தான் கிருமி தொற்று. அதை சரியாக அலசாம போட்டிருவோம். இதுமாதிரி காய்களை சமைச்சு சாப்பிடுவதால், நோயை விலை கொடுத்து வாங்கிறோம்கிறது யாருக்கும் தெரிவது இல்லை.காய்களின் கிருமி தொற்று அதிகமாக இருந்தா, வயிற்றுப்போக்கு, வாந்தி வரும். கிருமி தொற்று குறைவாக இருந்தா, அது மாதிரி தொடர்ந்து சாப்பிட்டா, போகப்போகத்தான் பாதிப்பு தெரியும். உணவுக் குழாயை பாதிக்கும். வயிறு சார்ந்த பல்வேறு நோய்கள் வரும்.காய்கறியை நறுக்கி சமைக்கவே சிரமப்பட்டா, வரும் காலத்தில நீங்க தான் அவதிப்படணும். எப்போதுமே, 'பிரஷ் காய்கறி தான் பெஸ்ட்'.இவ்வாறு, நீண்ட விளக்கம் அளித்தார் டாக்டர் மீனாட்சி.