உள்ளூர் செய்திகள்

டாக்டரின் டைரிகுறிப்பு: ஜூன் 20, 2015

மல்லிகாவிற்கு வயது, 28. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. அதை நினைத்து அடிக்கடி அழ ஆரம்பித்து விடுவார். 'தனக்கு பின்னே திருமணமானோருக்கு எல்லாம் குழந்தை பிறந்துவிட்டது' என, தன் தோழிகளை பற்றி கணவரிடம் கூறுவார். இதற்கிடையில், மல்லிகாவிற்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. தாங்க முடியாத அளவு இருப்பதாக, கணவரிடம் கூறினார். அவரும் வயிற்று வலிக்காக, அருகிலிருக்கும் மருந்துக் கடையில், வாயு பிரச்னை அல்லது அஜீரணக் கோளாறாக இருக்கலாம் என எண்ணி, வலி நிவாரணிகளை வாங்கித் தந்திருக்கிறார்.வலி மாத்திரைகளை சாப்பிட்டதும், வலி குறைந்துவிடும். ஆனால், மீண்டும் வயிற்று வலி வந்து பாடாய்படுத்தும். எனவே, ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார். மல்லிகாவை சி.டி., ஸ்கேன் எடுக்கச் சொன்னேன். பிரச்னை சரியாக புலப்படாததால், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்யச் சொன்னேன். அதில், வயிற்றுவலிக்கான காரணம் தெரிந்தது. மல்லிகாவின் இடது பக்க சினைப்பையில் கட்டி ஒன்று இருந்தது. அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று நினைத்தேன். அதனால், திசு பரிசோதனை செய்தேன். அதில், மல்லிகாவிற்கு இருப்பது சாதாரண கட்டி தான் என தெரிய வந்தது. சிறிய வயதென்பதால், அறுவை சிகிச்சை இல்லாமல், குணப்படுத்த முடியுமா என யோசித்தேன். ஆனால், மாற்று வழியே இல்லையென்பதால், அறுவை சிகிச்சை மூலம், இடது பக்க சினைப்பையிலுள்ள கட்டியை அகற்றினோம். அறுவை சிகிச்சை முடிந்து, மல்லிகா நலமடைந்து விட்டார். அவருக்கு இப்போது இருக்கும் சந்தேகமெல்லாம், பெண்களுக்கு இருக்கும், இரண்டு சினைப்பைகளில், ஒன்றை எடுத்தாகி விட்டது. மீதமிருக்கும் ஒரு சினைப்பையில் கருமுட்டைகள் உருவாகுமா; தன்னால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா என்பதே. பெண்ணின் உடலில் வலது, இடது என, இரு சினைப்பைகள் உள்ளன. ஏதாவது ஒரு சினைப்பை பாதிக்கப்பட்டு அகற்றினாலும், கருமுட்டைகள் உருவாவது குறைந்துவிடும். இருந்தாலும், மீதமுள்ள மற்றொரு சினைப்பை மூலம், கரு முட்டைகள் உருவாகும் என்பதால், கட்டாயம் கருத்தரிக்கலாம். சினைப்பையில் கட்டிகள் உருவாக மருத்துவ காரணங்கள் இதுவரை கண்டறியவில்லை. எட்டு மாதங்கள் கடந்த நிலையில், மல்லிகா என்னை தொலைபேசியில் அழைத்தார். மறு ஆலோசனைக்காக வரவேண்டுமா டாக்டர். மாதவிடாய் தள்ளி போயிருக்கிறது; இது, தாய்மையின் அடையாளமா என்று கூறினார். கட்டாயம் வா என்று கூறியதோடு, இறைவனிடம் வேண்டினேன். மல்லிகா கட்டாயம் தாய்மை அடைந்திருக்க வேண்டும்.அ.சாந்தி, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர்சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !