அதிகாலையில் கண் விழிக்க ஆலோசனை!
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினசரி இரவு படுக்கைக்கு செல்லும் போதே, தொற்றிக் கொள்ளும் பெரிய கவலை, அதிகாலை எழ வேண்டும் என்பதாகதான் இருக்கும். என்னதான் தினசரி நினைத்தாலும், அலாரம் அடிக்கும் போது, சிறிது நேரம் தூங்கலாம் என நினைத்து, லேட்டாக எழுந்து, அவசர அவசரமாக கிளம்பி, காலையிலே டென்ஷன் ஆகும் நபர்கள் தான் அதிகம். காலையில் சீக்கிரம் எழ, சில டிப்ஸ்: மூளைக்குச் சொல்லுங்கள்: அதிகாலையில் எழ வேண்டும் என்ற, திடமான தீர்மானத்தை, மூளையிடம் சொல்ல வேண்டும். ஏனெனில், மூளையை விட சிறந்த அலாரம் இல்லை. இந்த அறிவிப்பு, உரிய நேரத்துக்கு முன்பாகவே, ஹார்மோன்களை சுரந்து உடலுக்கு, ஒருவித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்புகிறது என, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்கு போகும் நபர்களுக்கு, இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம். சூரிய ஒளியும் எழுப்பும்: உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால், விடிந்ததுமே எழ முடியும். அதாவது, காலையில் விடிந்ததும், சூரியன் உதயமாகும் போது, வெளிச்சம் அறைக்குள் வந்தால், உறக்கம் கலைந்து எளிதாக எழ முடியும். அதற்கும், மனித உடலில் சுரக்கும், ஹார்மோன் தான் காரணம். அடிக்கடி மாற்றம் கூடாது: தினமும், ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக, 10:00 மணிக்கு அலுவலகத்துக்கு செல்ல வேண்டுமென்றால், எட்டு மணிக்கு எழுவதை வழக்கமாக்க கூடாது. எனவே, தினமும் காலை ஆறு மணிக்கு எழும் பழக்கத்தைக் கைக்கொண்டால், எந்த அலாரமும் தேவைப்படாது. உடலின் இயக்கமே, ஆறு மணிக்கு எழுப்பிவிடும். அதே சமயம், வார இறுதி நாளில், கும்பகர்ணனோடு போட்டி போட்டு தூங்கினால், இந்த உடல் இயக்கம் பாதிக்கப்படும். மீண்டும் மூளைக்கான அலாரத்தை, தூசி தட்டி பேட்டரி போட வேண்டி இருக்கும். அலாரத்தின் ஒலியும் அவசியம்: எந்த பயிற்சியும் ஒத்து வரவில்லை என்றால், அலாரம்தான் ஒரே வழி. பொதுவாகவே, அலாரத்தின் ஒலி, மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக, தட்டி எழுப்பும் வகையில்தான், அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல இருக்கக் கூடாது. அலாரத்தின் ஒலியைக் கேட்டு, மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது, உறக்கம் கலைவதுதான் நல்ல வழியாம். எழுந்து ஓட வேண்டாம்: தூங்கி எழுந்ததுமே, அலறி அடித்து கொண்டு வேலைகளை செய்ய ஓடக் கூடாது. உடல் உறக்கத்தில் இருக்கும் போது, ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எனவே, எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்து, நிதானம் அடைந்த பிறகு எழுந்து செல்லலாம். காற்றோட்டமாக உறங்கினால்...: இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால், காலையில் விரைவாக எழ முடியும். இல்லையென்றால், இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டு, பின் காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்பட வேண்டியிருக்கும். காலையில் வழக்கமாக, எழும் நேரத்தை விட, முன்கூட்டியே எழுந்தால், அன்றாடப் பணிகளின் சுமை குறைந்து, நிதானமாக வேலைக்கு கிளம்பலாம்.