ஜாதிக்காய் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கும்
இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலா பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை. அதில் சில விசேஷ தன்மையுள்ள மருத்துவ பொருட்களும் உள்ளன. அதில் ஜாதிக்காய் மிக முக்கியமானது. ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவற்றை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாவு சல்லடையில் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும், ஒரு டீஸ்பூன் அளவு தூளை எடுத்து, காய்ச்சிய பசும்பாலில் கலக்கி, 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலட்டு தன்மை நீங்கும். ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு, 10 கிராம் எடுத்து, உரலில் போட்டு தூள் செய்து மாவு சல்லடையில் சலித்து, வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பாலில் கலக்கிக் குடித்து வந்தால், வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, பக்கவாதம், தலைவலி, வயிற்று வலியையும் குணப்படுத்தும். ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மை போல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேளைக்கு, ஒரு உருண்டை வீதம் ஒரு டம்ளர் பச்சை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க, மூலிகைகள் பல உள்ளன. அதில் மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும். எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும், ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து, நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து, கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை என, ஒரு நாளைக்கு மூன்று வேளை வைத்தால் பல் வலி குணமாகும். ஜாதிக்காயை உடைத்து, கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால் விட்டு மை போல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாக பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவினால், கண்பார்வை தெளிவடைந்து விடும். ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசி வந்தால், நாளடைவில் மறையும் என, சித்த மருத்துவம் கூறுகிறது.