உள்ளூர் செய்திகள்

முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!

'கொரோனா வைரஸ்' தொற்று என்பது என்ன?

சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு, 'கோவிட் - 19' என்று, உலக சுகாதார மையம் பெயர் வைத்துள்ளது. இதில், இந்த வைரஸ் புதிதாக தொற்றிய ஆண்டு, 'கொரோனா' என்பதன் முதல் எழுத்து, 'வைரஸ்' என்பதன் முதல் எழுத்து மற்றும் 'டிசீஸ்' என்பதன் ஆரம்ப எழுத்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

எத்தனை நாடுகளில் இதன் பாதிப்பு உள்ளது?

இதுவரையிலும் கொரோனா பாதிப்பு, 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய, நம் நாட்டைச் சேர்ந்த சிலருக்கும், இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, முதன்முறையாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

சீனாவில் உள்ள, வுஹான் மாகாணத்தில, இந்த வைரஸ் தொற்று இருப்பது, முதலில் தெரிந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும், பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், முதலில் இங்கு தான் உறுதியானது.

கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது?

கொரோனா வைரஸ் என்பது, விலங்குகளுக்கு இடையே பரவக் கூடியது. ஆனால், விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பாதித்தால், மற்ற மனிதர்களுக்கும் வேகமாக பரவும்.

மனிதர்களிடம் இருந்து எப்படி பரவுகிறது?

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது உறுதியான நிலையில், மனிதர்களிடம் இருந்து, மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது என்பது குறித்து, அறிவியல் பூர்வமான முடிவுகள், இதுவரை தெரியவில்லை. சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் என்பதால், பரவுவதும் அப்படியே தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.பாதித்த ஒருவர் தும்மும் போது, இருமல் மற்றும் வேகமாக மூச்சு விடும் போது, அருகில் இருப்பவருக்கும் பரவலாம்.பாதித்த ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு இந்த வைரஸ் பரவும் போது, வைரஸ் சுவாச மண்டலத்தை பாதித்து, அறிகுறிகள் வெளியில் தெரிவதற்கு, 2 -12 நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. வைரஸ் பாதிப்பு இருக்கும் ஒருவர், எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும் போதும், அவர் வாயிலாக மற்றவர்களுக்கு, வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், தசைகளில் வலி, அயர்ச்சி போன்றவை பொதுவான அறிகுறிகள். தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருந்தால், நிமோனியா, தீவிர சுவாச கோளாறுகள், ரத்தத்தில் தொற்று பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.

அதிக அபாயத்தில் இருப்பவர்கள் யார்?

பொதுவாகவே எந்த தொற்றாக இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், எளிதாக தொற்றும். இந்தப் பிரிவில் இருப்பவர்கள், குழந்தைகளும், முதியவர்களும். இவர்கள் தவிர, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, இதய கோளாறுகள், சுவாச, கல்லீரல் பிரச்னை இருப்பவர்களுக்கும் அபாயம் அதிகம். கொரோனா வைரசைப் பொறுத்தவரை, இது புதிதாக தாக்கி வரும் தொற்று. எனவே, யாருக்கெல்லாம் அதிக அபாயம் என்பதை, மருத்துவ பூர்வமாக, உறுதியாக சொல்வது தற்போது கடினம்.

இதற்கான சிகிச்சை முறைகள்?

கொரோனா வைரசை அழிப்பதற்கென்று, தனியாக மருந்துகள் இல்லை. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தர முடியும். உதாரணமாக, காய்ச்சல் என்றால், அதற்கான மருந்து, உடலில் திரவம் குறைந்தால் செலுத்துவது, சுவாசிக்க சிரமப்பட்டால், செயற்கையாக ஆக்சிஜன் தருவது என்று, அறிகுறிகளுக்கான ஆதரவு சிகிச்சை தரப்படும். இதுவே, நல்ல பலனை தரும்.பாதிப்பை உறுதி செய்ய, என்ன பரிசோதனை தேவை?எதிர்பாராத விதமாக ஏற்படும் மூச்சுத் திணறல், இருமல், தொண்டையில் புண், சுவாசத் தொற்று இருந்தால், பரிசோதிக்க வேண்டும்.இது போன்ற அறிகுறிகள் தெரிவதற்கு, 14 நாட்களுக்கு முன், கொரோனா பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களுக்கு பயணம் செய்திருந்தால், வைரஸ் பாதித்தவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கை கழுவுவது பாதுகாப்பானதா?

தொற்று ஏற்படாமல் இருக்க, கைகளின் சுத்தம் மிக முக்கியம். சோப்பு அல்லது லோஷன் உபயோகித்து, 20 வினாடிகள் கைகளை கழுவ வேண்டும். குறைந்தது, 60 சதவீதம் ஆல்கஹால் பயன்படுத்தி தயாரான, 'ஹேண்ட் சானிடைசர்' கொண்டு, கைகளை சுத்தம் செய்யலாம். கண்கள், மூக்கு, வாய் வழியாகவே வைரஸ் உடலுக்குள் நுழையும் என்பதால், சுத்தம் செய்யாத கைகளால், இவைகளை தொடுவதை தவிர்க்கவும்.

முக கவசம் பாதுகாப்பானதா?

தொற்று பாதித்தவர், முக கவசம் அணிவது, அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும். ஆனால், தொற்று பாதிக்காதவர்களுக்கு, முக கவசம், 100 சதவீதம் பாதுகாப்பைத் தராது.

கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்துகள் உள்ளதா?

தற்போதைக்கு, எந்த தடுப்பு மருந்தும் இல்லை. அதனால் தான், வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும், பாதித்தால் உடனடியான மருத்துவ உதவியும் அவசியம்.

பன்றி காய்ச்சல் உட்பட, 'புளூ வைரஸ் தடுப்பு ஊசி, கொரோனாவிற்கு பாதுகாப்பு தருமா?

பருவ காலத்தில் ஏற்படும், புளூ வைரஸ் தொற்றும், கொரோனா வைரசும் வேறானவை. அதனால், எந்தத் தடுப்பு மருந்தும், இதற்கு முழுமையான பாதுகாப்பை தராது.

அசைவ உணவு சாப்பிடுவதால், கொரோனா பரவுமா?

அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. அசைவ உணவுகளை, நன்கு சமைத்து சாப்பிட்டால், பிரச்னை வராது.

முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்?

இருமல், தும்மல், சளி பிரச்னைகளுடன் இருப்பவர்களுடன், நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை பண்ணைகளுக்கு செல்வதை தவிர்க்கலாம்.கைகளை அடிக்கடி, சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக, சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுடன் கை குலுக்கும் போது, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்திய பின், கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.டாக்டர் எஸ். சுப்பிரமணியன்,இயக்குனர், காஞ்சி காமகோடி சைலட் டிரஸ்ட் மருத்துவமனைசென்னை044 - 4200 1800


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !