மாட்டு கொம்பால் சிகிச்சை செய்யும் போலி டாக்டர்கள்!
நம் நாட்டில், 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மலக்குடல், பெருங்குடல் கேன்சர் பாதிப்பு, 30 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்கன் காலேஜ் ஆப் கோலான் ரெக்டல் சர்ஜன் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்து உள்ளது. மலத்தில் ரத்தம் கலந்து வந்தால், 'பைல்ஸ்' என்று நினைத்து, நாட்டு வைத்தியம், போலி டாக்டரிடம் சிகிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.இவர்கள், சிகிச்சை என்ற பெயரில், பவுடர் போடுவது, மூலிகைகளை தடவுவது, மாட்டுக் கொம்பால் கட்டியை உடைப்பது என்று கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு கொடூரமான செயல்கள் செய்கின்றனர். பைல்ஸ் என்று நினைத்து போலி டாக்டர்களிடம் செல்பவர்களுக்கு பெரும்பாலும் மலக்குடல் கேன்சராக இருக்கும். என் சொந்த கிராமத்தில் வசிக்கும் பள்ளி ஆசிரியர் இரண்டு ஆண்டுகள் போலி டாக்டரி டம் சென்று அவதிப்பட்டு, ரத்தம் வழிவது நிற்காமல், அதன்பின் என்னிடம் வந்தார். நான் பரிசோதித்தில் அவருக்கு மலக்குடலில் கேன்சர் இருப்பது தெரிந்தது. இன்னொரு இளம் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, 34 வயதில் கர்ப்பம் தரித்தார். தொடர்ந்து வலி என்று மகப்பேறு மருத்துவரிடம் சொன்னபோதும் குழந்தை வளர்வதால் ஏற்பட்ட வலி என்று சொல்லிவிட்டார். பிரசவத்திற்கு பின் வலி அதிமாக, சி.டி., ஸ்கேன் செய்ததில் மலக்குடலில் கேன்சர். கடந்த காலங்களில் அமெரிக்காவில், நார்ச்சத்து இல்லாத, அதிக மாவுச்சத்து உள்ள உணவுக ளை சாப்பிட்டனர். இந்தத் தவறை கடந்த 20 ஆண்டுகளாக நாம் செய்கிறோம். அதனால் அதிக அளவில் அவர்களுக்கு வந்த மலக்குடல், பெருங்குடல் கேன்சர் பாதிப்பு நம்மிடம் வந்து விட்டது. முறையற்ற உணவுப் பழக்கத்தாலும், அறிகுறிகளை அலட்சியம் செய்வதாலும், 50 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு குடல் சார்ந்த நோய்கள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் -ஐ.சி.எம். ஆர்., அறிக்கை கூறுகிறது. டாக்டர் பரமேஸ்வரா.சி.எம், இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், ஸ்மைல் மருத்துவமனை, பெங்களூரூ 95134 46023operations@smilehospitals.com