உள்ளூர் செய்திகள்

நெல்லிக்கனி தின்றால் வாய்ப்புண் நீங்கும்

சங்க காலம் தொட்டே, நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்து விட்ட ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து, பல புலவர்கள் நெல்லிக்கனியை பற்றி பாடியுள்ளனர். முதுமையை தடுக்கும் குணம், நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை, சித்தர்கள் முதல் பாமரர் வரை அனைவரும் அறிந்த உண்மை. நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என நிருபித்துள்ளனர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கொண்டது. ஆன்டிஆக்ஸிடன்ட் என்பது உடலில் உள்ள, நச்சுப்பொருள்களை அகற்றி நோயிலிருந்து உடலை காத்து, முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும். நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். நெல்லி சாப்பிட்டு முடித்ததும், தண்ணீர் குடித்தால் வாய் இனிப்பாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது, நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது. மற்ற எந்த பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் தாது உப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில், 20 மடங்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. ஆப்பிளை விட மூன்று மடங்கு, புரதச்சத்து நெல்லியில் உள்ளது. இதய வால்வுகளில், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. நெல்லி இலையை, 25 கிராம் எடுத்து நீரில் இட்டு, கொதிக்க வைத்து ஆற வைத்து வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப்புண் தீரும். 15 கிராம் நெல்லிக்காயை இடித்து, 1/2 லிட்டர் நீர் விட்டு, 100 மி.லி ஆக காய்ச்சி, 20 மி.லி. தேன் கலந்து, 40 மி.லி. ஆக, 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு, 20 கிராம் எடுத்து, 1 லிட்டர் நீர்விட்டு, 200 மி.லி.,யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி., என காலையும் மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லி இலைகளை நீரில் ஊற வைத்து, கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண் நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து, தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபலா சூரணம் செய்து, காலையும் மாலையும் வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால், நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்