உள்ளூர் செய்திகள்

காதுக்குள் எண்ணெய் ஊற்றுவது சரியா?

நம் உடலில் உள்ள உறுப்புக்களில், தலை மிக முக்கியமான உறுப்பாகும். தலையில் தான் கண், காது, மூக்கு, நாக்கு, மூளை போன்ற முக்கிய உறுப்புகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனி கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய உறுப்புகளாகும். வாரத்தில் மூன்று முறை, குளித்து முடித்ததும் சுத்தமான பஞ்சால் காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். கையில் கிடைத்த பொருட்களை, காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்கக்கூடாது. காரணம், காதில் உள்ள செவிப்பறையில் சிறு காயம் ஏற்பட்டால் கூட கேட்கும் திறனை இழக்கும் அபாயம் உள்ளது. காதில் எண்ணெய் விடுவது தவறான செயல். காதுகளில் பிரச்னை இருந்தால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியான முறை. காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது, தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம், தண்ணீரை வெளியேற்றி அடைப்பை நீக்கலாம். தேவைப்பட்டால் மெல்லிய பட்ஸ் மூலம் சுத்தப்படுத்தலாம். காது குத்தும் போது, மென்மையான காது மடலில் மட்டுமே குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் குத்தினால், நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தால், குழந்தையின் காதில் பிரச்னை இருக்கலாம். பள்ளியில் கவனக்குறைவாகவும், மந்தமாகவும் குழந்தைகள் இருந்தால் காதில் நீர் கோர்த்து இருக்கலாம். மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை, உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமல், பேசாமல் இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். காது கேட்கும் திறன் குறைந்து போனால், ஆரம்பத்திலேயே ஒலி கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம். காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால், உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவி. தொடர்ந்து ஓசை எழுப்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கை சிந்தும் போது மிகப்பலமாக சிந்தக் கூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு பாதிப்பு ஏற்படும். நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காது கேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் தாக்கப்படும் குழந்தைகள், காது கேட்கும் திறனை இழக்க நேரிடும். மொபைல்போனில் தொடர்ந்து பேசுவது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !