உள்ளூர் செய்திகள்

உணவை இனிப்பில் துவங்குவது நல்லது!

வீட்டு விசேஷம், பண்டிகை, திருவிழாவின் போது, வாழை இலையில் சாப்பிடுவது, நமது பாரம்பரியம். ஓட்டல்களும் கூட, இம்முறையை தான் பின்பற்றுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவது, செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது. முதலில் இனிப்பு: விசேஷங்களில் முதலில் பரிமாறப்படுவது இனிப்பு தான். ஏனெனில், உமிழ்நீர் சுரப்பதால்தான், உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும். உணவை அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக, உமிழ் நீருக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நம் முன்னோர் கூறினர். உணவின் இறுதியில், மோர் சாப்பிடுவது நல்லது. ஜீரணம் நடைபெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக்கூடிய அல்சருக்கு, மோர் பானமே மருந்தாக இருக்கும். இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில், உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும். சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால், அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர்நாடுகளில் இருப்பவர்களுக்கு, பசியை தூண்ட, சூடான சூப் குடிக்கும் பழக்கம் இருந்தது. இது, நமது நாட்டுக்கு ஏற்ற உணவல்ல. இதே போல், பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின், டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில், பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவதே நல்லது. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு, அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது ஜீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க உதவும். காலையில், குளிர்ந்த நீர் இரு டம்ளரும், இரவில் படுக்கும் முன் மூன்று டம்ளர் வெந்நீரும் அருந்தினால், உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால், உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும். உணவின் இடையில் தண்ணீர் குடித்தால், நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். சூடான உடல்வாகு கொண்டவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டி, பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும். நமது உணவில் மட்டும் தான், அனைத்துச் சுவைகளும் சேர்த்து, சரிவிகித உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனால், உணவில் அனைத்துச் சத்துகளும் முழுமையாக கிடைப்பதோடு, எளிதில் செரிமானம் அடைவதற்கான பொருட்களும் இருந்தன. இந்த பழைய முறையைத் தெரிந்து கொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்