"லேப்ரோஸ்கோபி செய்தால் தழும்பு ஏற்படாது!
சாயிராபானு, திருநெல்வேலி: எனக்கு 29 வயதாகிறது; திருமணமாகி ஐந்தாண்டு ஆகிறது. 25 வயதிலேயே தலை நரைத்து விட்டது. மருதோன்றி பூச்சு பூசினேன். தலைமுடி சிவந்த பழுப்பு நிறமாகி விட்டது. இது எனக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது?முப்பது வயதாகும்போது, உங்கள் தலைமுடியில் பாதி நரைத்து விட்டது. இதற்கு பொதுவான காரணம், பரம்பரை தான். நாளமில்லா சுரப்பிகளில் பிரச்னை ஏற்பட்டாலும் இளநரை தோன்றலாம். வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக் குறைபாடுகள் இருந்தாலும் ஏற்படலாம். மருதோன்றி, நெல்லிக்காய், செம்பருத்தி, கறிவேப்பிலை, தேயிலை ஆகியவை, தலைமுடியை கருமையாக்க உதவும். தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயில் இவற்றைப் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்து கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயை தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிக்குளித்தால், நரை கட்டுப்படும். தீர்க்க முடியாத பட்சத்தில், தலையில் சாயம் பூசிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.தேவி, சென்னை: எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் குழந்தைகள் பெற விரும்பவில்லை. வளைகுடாவில் வேலை பார்க்கும் என் கணவர், இரண்டாண்டுக்கு ஒருமுறை, நான்கு மாத விடுப்பில் இங்கு வருவார். அப்போது நான் கர்ப்பம் தரிக்கும் நிலை ஏற்படுகிறது. இரு முறை கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளேன். ஆணுறை பயன்படுத்துவதை அவர் விரும்புவதில்லை. என்ன செய்யலாம்?மகப்பேறு மருத்துவரை அணுகி, கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது குறித்து அறிவுரை பெறலாம். கருத்தடை கருவி பொருத்திக் கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கலாம். சில ஊசி வகைகளும் உள்ளன. இனி குழந்தைகளே வேண்டாம் என்ற முடிவில் நீங்கள் இருந்தால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.லேப்ரோஸ்கோப் மூலம் இதை செய்து கொள்ளலாம். சிகிச்சை முடிந்ததும் வீடு திரும்பி விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. தழும்புகளும் ஏற்படாது.ராஜா, கரிசல்குளம்: எனக்கு 27 வயதாகிறது. நான்காண்டுகளாக மது அருந்தும் பழக்கம் உள்ளது. 30 மி.லி., அளவிலிருந்து துவங்கி, இப்போது 60 மி.லி.,யாகி விட்டது. தினமும் மது அருந்துகிறேன். என் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுமா? எப்படி பாதுகாப்பது?நீங்கள் மது அருந்தும் அளவை வைத்து பார்க்கும் போது, நீங்கள் மதுவை சார்ந்திருப்பவர் எனக் கூற முடியாது.நீங்கள் ஆபத்தான கட்டத்தை அடைகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்:* தனிமையில் மது அருந்தும் பழக்கம்.* மது அருந்தினால் தான் செயலாற்ற முடியும் என்ற நிலை அல்லது மது அருந்தினால் தான் தூக்கம் வரும் என்ற நிலை.* மது அருந்தும் அளவு படிப்படியாக அதிகரித்தல்.உங்கள் கல்லீரலை பாதுகாக்க, ஹெப்பாடைடிஸ் பி மற்றும் ஏ ஆகியவற்றுக்கான, நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த, சரிவிகித உணவு உட்கொள்ளுங்கள். தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். கல்லீரலை பாதுகாக்க சில மூலிகைகளும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவற்றின் செயல்பாடு, பக்கவிளைவுகள் குறித்து தெரியவில்லை.