உள்ளூர் செய்திகள்

மனசே மனசே... குழப்பம் என்ன!

நாள் 1பிளஸ் 2 படிக்கும் அமலாவை பெற்றோர் அழைத்து வந்தனர். வயிறு தொடர்பான பிரச்னைகளோடு, வாந்தி, துாக்கமின்மை உட்பட பல பிரச்னைகள், அமலாவுக்கு இருந்தன. முதலில், பொதுநல மருத்துவரிடம் காட்டி, அவர் சிபாரிசின்படி, ஜீரண மண்டல சிறப்பு டாக்டரிடம் சென்றனர்; உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்லை.'எப்போதெல்லாம் உனக்கு இந்தப் பிரச்னை வருகிறது' என, அமலாவிடம் கேட்டேன். 'நான் கவனித்த வரையில், அறிவியல் பாடங்களில், குறிப்பாக, கெமிஸ்ட்ரி வகுப்பில், கெமிஸ்ட்ரி தேர்வு, பிராக்டிகலின் போது' என, அவளது பெற்றோர் கூறினர்.அமலாவிடம் பேசியதில், கெமிஸ்ட்ரி பாடத்தில் அவளுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. பதற்றம், பயம் போன்றவற்றால், தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை எனத் தெரிந்தது. சரியாக தேர்வு எழுதாத எல்லா மாணவர்களையும் கண்டிப்பது போல், அமலாவையும் ஆசிரியர் கண்டித்தார். அவ்வாறு ஆசிரியர் கண்டிப்பது, அமலாவின் பிரச்னைக்கு மூலகாரணம் என, தெரிய வந்தது.நாள் 2சிறப்பு மருத்துவ அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர் அவர். 25 ஆண்டுகளுக்கு முன், பயிற்சி மருத்துவராக இருந்த போது, என்னிடம் வந்தார். பதற்றம், பயம், நடுக்கம் என, பல மனப்பிரச்னைகள் அவருக்கு இருந்தன. நோயாளி பயந்தால் இவரும் பயந்து விடுவார். தசைத் தளர்வு பயிற்சி, மூச்சுப்பயிற்சி உட்பட, மன தைரியத்தைக் கொடுக்கும் ஆலோசனைகளையும் தந்தேன். அவர், முழுமையாக பிரச்னைகளிலிருந்து வெளியில் வந்து விட்டார். டாக்டரின் மகன், வெளிநாட்டில் உயர் கல்வி படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு, வகுப்பில் அல்லது வெளியிடங்களில், திடீரென, வயிற்றில் கடமுடா என, சத்தம் வர ஆரம்பிக்கும். இதனால், 'அய்யோ, என் வயிற்றில் ஏற்படும் சத்தம் வெளியில் கேட்டால், மற்றவர்கள் தவறாக நினைத்து, நம்மைப் பார்த்து சிரிப்பர்' என, பதற்றம் வந்து விடும்.மகனை என்னிடம் அழைத்து வந்தார் டாக்டர். உளவியல் பரிசோதனை செய்து பார்த்ததில், நன்றாக படிக்க முடியவில்லையே' என்ற எண்ணம், வயிற்றில் கடமுடா சத்தம், மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறல் போன்றவை ஏற்பட்டன. ஆழ்ந்த தசைத் தளர்வு சிகிச்சை மற்றும் பயிற்சியும் கொடுத்தேன். ஆறு முறை உளவியல் பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கு பின், அவருடைய பிரசனைகள் கணிசமாக குறைந்து, படிப்பை தொடர, வெளிநாடு சென்று விட்டார்.பதற்றம் இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது. முதலாவது, மரபியல் காரணங்களால் வருவது. அடுத்தது, சூழ்நிலைகளால் வருவது. எந்தெந்த விஷயங்கள் நம்மை பதற்றத்திற்கு ஆளாக்குகின்றன என்பதை தெரிந்து, தேவையான ஆலோசனைகளை பின்பற்றினால், மனநலப் பிரச்னைகளில் இருந்து, சுலபமாக வெளியில் வந்து விடலாம்.இன்றைய பரபரப்பான உலக வாழ்க்கையில், பிரச்னைகள் இல்லாமல் இருக்க முடியாது; அவற்றை முறையாக எதிர்கொண்டு, முன்னோக்கி சென்று வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இதில், பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது.டாக்டர் பி.எஸ். விருத்தகிரிநாதன்,நரம்பு மருத்துவ உளவியல் நிபுணர், சென்னை.drbsv18@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்